
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு உரிய பண்புகளை வளர்த்துக் கொண்டு சகலரையும் சமமாக மதித்து வழி நடத்தக்கூடிய பக்குவம் சுமந்திரன் அல்லது சிறீதரனுக்கு காணப்பட்டால் தலைமை தாங்கும் இடத்தை அவர்கள் பெறுவார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “ இரா. சம்பந்தனின் மறைவின் பின்னர் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ விடயத்தில் ஒரு இழுபறி நிலை காணப்பட்டாலும் தற்போது பதில் தலைவராக சீ வி. கே சிவஞானம் தலைமைத்துவத்தை ஏற்று நடத்துகிறார்.
தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசிய கட்சி என்பதுடன் ஒரு விடுதலையை அடிப்படையாக கொண்ட கட்சியாகும்.
இந்த கட்சியை தமிழ்தேசிய சிந்தனை மற்றும் தழிழர்களின் இழப்புகள் பற்றி சிந்தித்து வழிநடத்தக் கூடிய ஒரு மனப்பக்குவம் உள்ளவர் தலைமை ஏற்கலாம்.
அத்துடன், தலைவர் என்ற பொறுப்பை ஏற்க கூடியவர்கள் பொறுமை உடையவர்களாகவும் விட்டுக்கொடுப்பு கொண்டவர்களாகவும் மற்றும் பழிவாங்கும் குணம் அற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.
அத்துடன், தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.
கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கில் தமிழ்க் கட்சிகள் தனித்து செயற்பட்டமையால் மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
No comments: