News Just In

8/19/2024 02:26:00 PM

பொத்துவில், அறுகம்பே அரைமரதன் ஓட்டப்போட்டி... ஆண்கள் பிரிவில் காரியவசம், பெண்கள் பிரிவில் அனிக்கா பேலிம் முதலிடம்.



(அஸ்ஹர் இப்றாஹிம்)
அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியின் 21.1கிலோமீற்றர் போட்டியில் ஆண்கள் பிரிவில் அவிசாவலையை சேர்ந்த விமல் காரியவசம் முதலாமிடத்தினையும், வெலிமடயை சேர்ந்த ரீ.டபள்யூ.ரத்னபால இரண்டாமிடத்தினையும், டென்மார்க்கை சேர்ந்த பெஸ்டியன் குலோஸ்கோ மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

பெண்கள் பிரிவில் கென்யாவைச் சேர்ந்த அனிக்கா பேலிம் முதலாமிடத்தினையும், ஜேர்மனியை சேர்ந்த டீ.அனிக்கா டோன் இரண்டாமிடத்தினையும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த சஸாலி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி கடந்த ஞாயிறு (18) பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

குறித்த மரதன் ஓட்டப்போட்டியானது 21.1 கிலோமீற்றர் அரை மரதன், 10கிலோமீற்றர் மற்றும் 5கிலோமீற்றர் என மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது. 5கிலோமீற்றர் போட்டியில் சிறுவர்கள் மாத்திரம் கலந்துகொண்டனர். ஏனைய இரு பிரிவுகளிலும் பிரபல மரதன் ஓட்ட வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது 10கிலோமீற்றர் மரதன் போட்டியின் ஆண்கள் பிரிவில் வெலிமடையை சேர்ந்த டீ.எம்.எரந்த தென்னகோன் முதலாமிடத்தினையும், மகியங்கனையை சேர்ந்த கே.எம்.சரத்குமார் இரண்டாமிடத்தினையும், நுவரெலியாவை சேர்ந்த எம்.சௌந்தரராஜன் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார். பெண்கள் பிரிவில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெல்லா றுஸல் முதலாமிடத்தினையும், றீஸ்கா கிஸ்ஜெஸ் இரண்டாமிடத்தினையும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த டெஃப்னா டென்போமா மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார்.

சிறுவர்களுக்கான 5கிலோமீற்றர் மரதன் ஓட்டப்போட்டியில் கே.றினோஸ் முதலாமிடத்தினையும் எம்.ரீ.எம்.இன்ஷாப் இரண்டாமிடத்தினையும், என்.அனீஸ் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார்.

அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகவும், இராணுவத்தின் 242வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் களன அமுனுபுர, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.உவைஸ், பெடிவே உல்லாச விடுதியின் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் பீ.சப்றாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் விசேட அதிதிகளாகவும் கலந்துசிறப்பித்தனர்.

குறித்த மரதன் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு பணப்பரிசில்களுடன் பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. அறுகம்பே அபிவிருத்தி போரம் 6வது தடவையாக நடாத்திய இந்த மரதன் போட்டியில் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என 260பேர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: