வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்கவுக்கு எவ்வித நெருக்கடிகளையும் ஏற்படுத்த போவதில்லை.முடிந்தால் அவர் கஞ்சிபான் இம்ரானை நாட்டுக்கு அழைத்து வரட்டும்.தேவையாயின் ஒத்துழைப்புக்களை வழங்க தயார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டில் தலைமறைவாகியுள்ளதாக குறிப்பிடப்படும் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க தனக்கு அதிகாரம் வழங்கினால் பாதாள குழுவின் முக்கிய நபரான கஞ்சிபான் இம்ரானை நாட்டுக்கு அழைத்து வருவதாக குறிப்பிடப்படும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், கிளப் வசந்தவின் படுகொலையின் பின்னர் காளாள் பூப்பதை போன்று பலர் தோற்றம் பெற்றுள்ளார்கள்.தனக்கு அது தெரியும்.இது தெரியும் என்று குறிப்பிடுகிறார்கள்.
பைத்தியகாரர்கள் குறிப்பிடுவதற்கு கவனம் செலுத்த முடியாது.சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விடயங்களுக்கு கவனம் செலுத்தினால் முறையான விசாரணைகளை முன்னெடுக்க முடியாது.
தலைமறைவாகியுள்ள கஞ்சிபான் இம்ரானை நாட்டுக்கு அழைத்து வருவதாக முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.பிரச்சினையொன்றும் இல்லை அவர் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க தயார்.அவருக்கு எவ்வித நெருக்கடிகளையும் நாங்கள் ஏற்படுத்த போவதில்லை.
இந்த பொலிஸ் அதிகாரி தான் நாட்டை விட்டு வெளியேறுவதை முறையாக அறிவிக்கவில்லை.இவருக்கு எதிராக திணைக்கள மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
No comments: