மாளிகைக்காடு செய்தியாளர்
இது எங்களுடையதும் நமது மக்களுடையதுமான வாழ்க்கைப் போராட்டமாகும். தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதற்கு எமது மக்கள் விளையாடும் கார்ட்ஸ் அல்ல. இதன்பின்னர் தலைநிமிர்ந்து நிற்கும் மக்களை உருவாக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. கடந்த 30 வருடத்துக்குள் உலகம் எவ்வளவோ மாற்றம் பெற்றுவிட்டது. இருந்தும் நமது மக்கள் இன்னமும் அடிப்படை தேவைகளுக்காக அவதியுறுகின்றார்கள் என்றால் நம்மை வழிநடத்துபவர்கள் சரி இல்லை என்றுதானே அர்த்தம். இதனை நாம் சரி செய்யவேண்டும் என கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம் சபிஸ் தெரிவித்தார்.
மருதமுனை விக்டோரியஸ் விளையாட்டு கழகத்தின் புதிய மேலங்கி அறிமுக நிகழ்வும் விக்டோரியஸ் கலர்ஸ் நைட் விழாவும் விக்டோரியஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மருதமுனை ஒசாக்கா ரேஸ்ட் இன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், ஒளிந்து நின்று பேசிய காலம் போதும். வெளிப்படையாக இளைஞர்கள் முன்வந்து எமது சமூகத்தினதும் நாட்டினதும் தலைவிதியை மாற்றும் காலம் வந்துவிட்டது. பாரிய மாற்றங்களோடு சுயதொழில்கள் மூலம் பிற்போக்கு சிந்தனைகளை உடைத்து முன்னோக்கி நகரும் காலத்துக்கு நாம் வர பிந்தி விட்டோம். இனியும் தாமதிக்க முடியாது. எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என எஸ்.எம் சபீஸ் அங்கு தெரிவித்தார்
No comments: