News Just In

7/28/2024 11:20:00 AM

குச்சவெளி இளந்தைக்குளம் மீள்குடியேற்றக் கிராமத்திற்கு கள விஜயம்!



திருகோணமலை - குச்சவெளி, இளந்தைக்குளம் மீள்குடியேற்றக் கிராமத்திற்குச் சொந்தமான காணியை விகாரைக்காக அத்தூமீறி துப்பறவு செய்ததை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உடனடியாக அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து துப்பறவு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று (27) அந்த காணியை பார்வையிடுவதற்காக கள விஜயம் மேற்கொண்டதுடன் காணியை உரிய மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குச்சவெளி - இலந்தைக்குளம், 5ஆம் கட்டைப்பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இரவில் இருந்து குச்சவெளி விகாரையான பிச்சமல் புரான ரஜமகா விகாரையினுடைய விகாராதிபதியின் தலைமையில் புத்த விகாரை அமைப்பதற்காக மக்களுடைய காணி துப்பரவு செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணிகள் துப்புரவு செய்யப்படுவதை வயலுக்கு சென்ற விவசாயிகளினால் அவதானிக்கப்பட்டு மக்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் (26) குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இலந்தைக்குளம் பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்டிய காலப்பகுதிகளில் இடம் பெயர்ந்திருந்ததாகவும், அப்பகுதியில் மீள குடியமர்வதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்டகாலமாக முன்வைத்து வருவதாகவும் இந்நிலையில் ஆக்கிரமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பிறப்பு அத்தாட்சி பத்திரம், இறப்பு அத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணங்கள் உட்பட உடைந்த பாடசாலைக் கட்டடம் மற்றும் அரச கட்டடங்களும் இன்னும் ஆதாரங்களாக காணப்படுவதாகவும், வயல் வரம்புகளும் இன்னும் அழியாமல் காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், இலந்தைக்குளம் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அயல் கிராமங்களிலும் வேறு வேறு மாவட்டங்களிலும் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுடைய காணிகள் வழங்கப்படும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் குடியேற தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த கள விஜயத்தின்போது குச்சவெளி பிரதேச செயலாளர் குனநாதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பளீல் அமீன், உயர்பீட உறுப்பினர் அன்ஸார் ஹாஜியார், இளைஞர் சேவை உத்தியோகத்தர் பமீஸ், றகீம் தலைவர், அஸீஸ் மௌலவி, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் அமீர் ஜஹான், கிண்ணியா இளைஞர் அமைப்பாளர் ஜர்சாத் ஏ மஜீத், யாஸீர் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

No comments: