News Just In

6/28/2024 05:47:00 AM

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்! ஜனாதிபதி ரணில்



பிள்ளைகளின் கல்விக்காக காலை வேளையில் ஆசிரியர்கள் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது என்றும், எதிர்வரும் நாட்களில் அவ்வாறு நடக்காமல் போனால் ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை இன்று (27) சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆசிரியர்களும், அதிபர்களும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு முன்மாதிரியாக செயற்பட வேண்டும் எனவும், அவர்கள் போராட்டங்களிலும், வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடும் போது, எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு அவர்களால் எவ்வாறு அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும்​ என சிந்திக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஒட்டுமொத்தமாக ஆசிரியர் சேவையிலிருக்கும் சகலரும் இந்த ஆர்ப்ப்பாட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்றும் அரசியல் சார்ந்தவர்களே இதில் பங்கெடுத்திருப்பதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் ஒட்டுமொத்த ஆசிரியர் தொழிலுக்கும் களங்கம் ஏற்படுமெனவும் தெரிவித்தார்.

சிங்கள பாடசாலைகளுக்குள் மாத்திரமே இந்த பணிப் புறக்கணிப்பு காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, தமிழ், முஸ்லிம், தனியார் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் வழமைப்போல நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பாடசாலையின் பாதுகாவலர்கள் மாணவர்களை திருப்பி அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: