எதிரி எதை ஆதரிக்கிறானோ அதை நீ எதிர்ப்பாயாக, எதிரி எதை எதிர்க்கிறானோ அதை நீ ஆதரிப்பாயாக"" என்று ஒரு அரசியல் தத்துவார்த்த கூற்று உண்டு. இதுதான் அரசியல் இராஜதந்திரத்தின் அகரவரிசை. அதை விடுத்து எதிரி எதை விரும்புகிறானோ அதை நாமே செய்வது என்பது நமது அழிவுக்கு நாமே குழியை வெட்டுவதாகும்.
இன்று இலங்கை அரசியலில் சிங்கள தேசம் தமிழ் பொது வேட்பாளரை எதிர்ப்பதில் கங்கணம் கட்டி நிற்கிறது. இதிலிருந்து பொது வேட்பாளர் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்க வல்லது என்பதும் அது சிங்கள தேசத்துக்கு தீமை பயக்கக்கக் கூடியதோடு சிங்களதேசத்தை சிக்கலில் சிக்க வைப்பதாக அமையும் என்பதையும் வெளிக்காட்டி நிற்கிறது.
""முடிந்தால் குடும்பியைப் பிடி, முடியாவிட்டால் காலை பிடி"" என்றொரு சிங்கள பழமொழி உண்டு. அதை இன்றைய ஜனாதிபதி தேர்தலில் சிங்களத் தலைவர்கள் வெளிப்படுத்துகின்றனர். அதில் முதற்கட்டமாக சிங்கள அரசியல் தலைவர்கள் தாம் தமிழ் பொது வேட்பாளரை ஒரு பொருட்டாக கருதவில்லை என ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள்.
ஆனால் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்பது உறுதியாகி வலுவடைகின்ற நிலையில் வடக்கு நோக்கி சிங்களத் தலைவர்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். கடந்தகால 8 ஜனாதிபதி தேர்தல்களின் போதும் எந்த ஒரு சிங்கள ஜனாதிபதி வேட்பாளரும் வடபகுதிக்கு வந்ததே கிடையாது. ஆனால் இப்போது பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் மக்கள் நிறுத்தப் போவதாக அறிவித்ததும் சிங்கள தேசத்திலிருந்து ரணில் விக்கிரமசிங்க வடக்கில் ஆறு நாள் முகாமிட்டு தங்கினார்.
சஜித் பிரேமதாசாவும் அதே போன்று ஏழு நாட்கள் தங்கி நின்றார். அனுராகுமார திசாநாயக்காவும் நான்கு நாட்கள் தங்கி நின்று தமிழ் மக்களிடம் தமக்கு வாக்களிக்கும்படி வேண்டி நிற்கின்றனர். சிங்களத் தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வடபகுதிக்கு வந்து முகாமிட்டிருந்து தமிழ் மக்களிடம் வாக்கு கேட்பது என்பது இலங்கை அரசியலில் அதிசயம்தான்! விந்தையிலும் விந்தைதான்!! ஆனாலும் இந்த அதிசயத்தை நிகழ வைத்தது சிங்கள பௌத்த மதங்கொண்ட யானையை தமிழ் பொது வேட்பாளர் என்ற அங்குசம்தான் என்று சொல்ல வேண்டும்.
தமிழ் மக்கள் கெஞ்சுகின்ற போது சிங்களத் தரப்பு மிஞ்சி நின்றது. இப்போது தமிழ் மக்கள் மிஞ்சி நிற்கின்ற போது சிங்களத் தரப்பு கெஞ்சி நிற்கின்றது. இதனை பார்க்கின்ற போது ""மயிலே மயிலே என்றால் மயில் இறகு போடாது"" என்ற தமிழ் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
தமிழர் நிலத்திற்கு சிங்கள தலைவர்களின் படையெடுப்பு என்பது தமிழர்கள் தமக்குப் பின்னே நிற்கவேண்டும், அவர்கள் தனித்துவமாக நிற்கவும் கூடாது, தனித்துவமாக சிந்திக்கவும் கூடாது என்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். அத்தோடு தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டும் நிற்கக்கூடாது, கட்சிகளாக, பிரதேசங்களாக பிளவுபட்டு நிற்கவேண்டும்.
அவ்வாறு பிளவுபட்டு இருக்கின்ற போதுதான் தமக்குத் தேவையானவர்களை விலைக்கு வாங்கவும், தமக்கு தேவையானவர்களை கோடாலிக் காம்புகளாக பயன்படுத்தவும் முடியும். இதுவே சிங்கள அரசியல் சித்தாந்தமாக எப்போது உள்ளது. ஆனால் தமிழ் பொது வேட்பாளர் என்பது தமிழ் மக்களையும், கட்சிகளையும் ஐக்கிய படுத்துகிறது. தமிழ் மக்கள் ஒரு குரலாக ஒலிக்க முற்படுகிறார்கள்.
இதன் மூலம் சிங்கள தேசத்தோடு தமிழ் மக்கள் சேர்ந்து வாழத் தயாரில்லை. அவர்கள் தனித்துவமாகவே வாழ முற்படுகிறார்கள் என்ற செய்தியை சொல்வதன் ஊடாக தமிழர்கள் சர்வதேச அரசியலை நோக்கி வெற்றிகரமாக முன்னோக்கி நகர்ந்து விடுவார்கள் என சிங்கள தேசம் அச்சப்படுகிறது. இதன் அடுத்து அடுத்த கட்டமாக இப்போது சிங்கள தேசத்தின் ஊடகங்கள் தமிழ் பொது வேட்பாளரை இனவாதத்தோடு சித்தரிக்க தொடங்கி விட்டன
No comments: