News Just In

3/31/2026 08:58:00 AM

மட்டக்களப்பு கிணறு விவகாரம் ; அடுத்தடுத்து அவிழும் மர்ம முடிச்சுகள் ; கொழும்பில் சிக்கியவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மட்டக்களப்பு கிணறு விவகாரம் ; அடுத்தடுத்து அவிழும் மர்ம முடிச்சுகள் ; கொழும்பில் சிக்கியவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு



மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மயக்கமருந்துகளை வழங்கியதாக தெரிவிக்கப்படும் ஏழாவது சந்தேக நபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விசாரணை செய்வதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலிருந்து சென்ற கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினர் கொழும்பு,வத்தளை பகுதியில் வைத்து மயக்கமருந்துகளை விநியோகம்செய்த நபரை கைதுசெய்திருந்தனர்.

விசாரணையின் பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அறையில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது ஏழாவது சந்தேக நபருடன் முதலாவது சந்தேக நபரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.சந்தேக நபர்கள் மூடிய நிலையில் நீதிமன்றுக்குள் அழைத்துச்செல்லப்பட்டனர்.

இதன்போது கொக்கட்டிச்சோலை பொலிஸார் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக ஏழாவது சந்தேக நபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதியளித்தார்.

கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்தும் இளம்தாயின் 3 வயது சிறுமி கொத்தியாபுலை வயல்பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.

இதன்போது வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பி உட்பட ஆறு பேரை பொலிசார் கைது செய்துடன் இரு ஆட்டோக்கள் கார் ஒன்று மற்றும் கோடரி, கூரிய ஆயுதங்களையும் மீட்டனர்.

இது தொடர்பான தொடர் விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் குழவினர் முன்னெடுத்துவருகின்றனர்.

No comments: