News Just In

9/23/2023 10:33:00 AM

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தங்க விருது!

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தங்க விருது


நூருல் ஹுதா உமர்
Association of Public Finance Accountants of Sri Lanka (APFASL) - Public Sector Wings of CA Srilanka நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கணக்கறிக்கைகளை தயாரிக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களை தெரிவு செய்வதற்கான போட்டியின் போது அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.

அனுராதபுர நகரில் அமைந்துள்ள வடமத்திய மாகாண சபை கட்டடத் தொகுதியின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை 22.09.2023 பிற்பகல் நடத்தப்பட்ட விருது வழங்கும் வைபவத்தில் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இத்தங்க விருது வழங்கி வைக்கப்பட்டது. அக்கரைப்பற்று மாநகர சபை சார்பில் வேலைகள் மற்றும் திட்டமிடல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம். பீ. சலீத் மற்றும் கணக்கு பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். முஜாஹித் ஆகியோர் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்டனர்.

மாநகர ஆணையாளர் எ.டீ. எம். றாபி அவர்களின் வழிகாட்டலில் மாநகர சபைச் செயலாளர் எ. எம்.ஹபீபுர் ரஹ்மான், கணக்குப் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.ஏ.எம். ரியாத், வேலைகள் மற்றும் திட்டமிடல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம். பீ . சலீத் ஆகியோரின் தலைமையில் கடந்த 2023 ஜூலை மாதத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் அலுவலர்களால் இப்போட்டி நிகழ்ச்சிக்கான அறிக்கைகள் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விருதானது அக்கரைப்பற்று மாநகர சபை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு கிடைத்த வெற்றியாகும் என்பதுடன் இதற்காக பங்களிப்புச் செய்த அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் அக்கரைப்பற்று மாநகர சபை பெருமிதமடைகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments: