News Just In

9/27/2023 11:39:00 AM

அலிசப்ரி ஏன் இலங்கையை இந்திய கனடா மோதலிற்குள் இழுக்கின்றார்?

அலிசப்ரி ஏன் இலங்கையை இந்திய கனடா மோதலிற்குள் இழுக்கின்றார்? - டெய்லிமிரர்கேள்வி



இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஏன் இலங்கையை இந்திய கனடா மோதலிற்குள் இழுக்கின்றார் என டெய்லிமிரர் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கை அரசியல்வாதிகள் ஆச்சரியமளிப்பவர்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தவேளை நாடு அரசியல்நெருக்கடியில் சிக்குண்டிருந்தவேளை நாடு பணம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட வேளை இலங்கையின் அரச தலைவர்கள் சர்வதேச சமூகம் உதவவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

நல்லெண்ண நடவடிக்கையாக பல நாடுகள் உதவ முன்வந்தன-சில நாடுகள் தங்கள் சொந்த நலன் அடிப்படையில் உதவ முன்வந்தன- சில நாடுகள் நட்புறவின் அடிப்படையில் உதவ முன்வந்தன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேணவிரும்புவதாகவும் பக்கம்சாயவிரும்பவில்லை எனவும் தெரிவித்துவரும் அதேவேளை எதிர்பாராத நடவடிக்கையாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு தொடர்பற்ற இந்தியா கனடா முறுகல் நிலை குறித்து சர்வதேச ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளமை ஆச்சரியமளித்துள்ளது.

இலங்கையின் நிலைப்பாடு என்பதை விட கோபத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து போலதோன்றும் அந்த கருத்தில் அலிசப்ரி இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமரின் கருத்திற்காக கனடா பிரதமருக்கு எதிராக கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்- இது இலங்கைக்கு தொடர்பற்ற விடயம்.

கனடா இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அலிசப்ரி உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் ஆதாரங்கள் அற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம் கனடா பிரதமருக்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் அவ்வாறு நடந்துகொண்டார் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக பெரும் பொய்யை சொன்னார் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பதுஅனைவருக்கும் தெரியும் எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்..

இலங்கைவிவகாரங்களில் அலிசப்ரி கனடா பிரதமருக்கு எதிராக போர்கொடி தூக்குவது ஏற்றுக்கொள்ளக்கூடியவிடயம் -ஆனால் இந்திய- கனடா விவகாரங்களில் இந்த தருணத்தில் தலையிடுவது அர்த்தமற்றது போல தோன்றுகின்றது.

மேலும் இலங்கைக்கு தொடர்பற்ற விடயத்தில் தலையிட்டு உறவுகளை மேலும் சீர்குலைப்பது போலவும் தோன்றுகின்றது.

இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பில்லாத மோதல் குறித்து அலிசப்ரி வெளியிட்டுள்ள கருத்துகளை இலங்கை ஜனாதிபதியும் ஏற்றுக்கொள்கின்றாரா அல்லது இலங்கை இந்தியாவின் பக்கமோ அல்லது கனடாவின் பக்கமோ சாயாது என தெரிவிக்குமாறு அலிசப்ரியை கேட்டுக்கொள்கின்றாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இலங்கை தான் தீர்வுகாணவேண்டிய சொந்தமோதல்கள் உள்ளன தனக்கு கரிசனையை ஏற்படுத்தாத மோதலில்களில் தலையிடாமல் இலங்கை அதனை செய்யலாம் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

No comments: