பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை (25) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதைப்போன்று, சிங்களவர்கள் வட, கிழக்கில் சுதந்திரமாக வாழவேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதன் தொடக்கமாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம். இப்போராட்டத்தில் அனைத்து சிங்கள பௌத்தர்களும், இனவாதக்கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ளவேண்டும்' என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சில தினங்களுக்கு முன்னர் அழைப்புவிடுத்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் வெள்ளிக்கிழமை கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லம் முன்பாகப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதனையடுத்து, கொள்ளுப்பிட்டி, குயின்ஸ் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு முன்பாக இன்றைய தினம் காலையிலேயே பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் நீர்த்தாரை வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், போராட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அங்கு வருகைதரவில்லை. மாறாக இன்று காலை 10.30 மணியளவில் அங்கு வருகைதந்த பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான 4 - 5 பேர் அடங்கிய குழுவினர், எதிர்ப்புக்கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
கஜேந்திரகுமாரின் எம்.பி யின் இல்ல நுழைவாயில் மூடப்பட்டிருந்த நிலையில், சுமார் ஒருமணி நேரம் வரையில் கோஷங்களை எழுப்பிய அக்குழுவினர் பின்னர் இல்ல நுழைவாயிலை நோக்கி நகர முற்பட்டனர்.
இருப்பினும், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினரை முன்னேறவிடாமல் தடுத்தனர்.
அதனை எதிர்த்துக் குரலெப்பிய சீலரத்ன தேரர், 'கஜேந்திரகுமாரை வரச்சொல்லுங்கள். நீங்கள் கஜேந்திரகுமாருக்குப் பயப்படுகிறீர்களா? நீங்கள் அனைவரும் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரனைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள். ரணிலும் பயப்படுகிறார். மஹிந்தவும் பயப்படுகிறார். கோட்டாபயவும் அதனால்தான் வெளியேறினார்.
தற்போது வட, கிழக்கு மாகாணங்கள் இவர்களுக்கு வேண்டிய விதத்தில் இயங்குகின்றன. நாங்கள் இப்போது செல்கின்றோம். ஆனால் மீண்டும் வருவோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்' என்று பொலிஸாரைப்பார்த்து உரத்த தொனியில் கூறியதுடன் அங்கிருந்து திரும்பிச்சென்றார்.
No comments: