
150 ஆண்டு கால வரலாற்றை கொண்ட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கான நிரந்தர அதிபர் நியமன இழுபறி விடயத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது.
இதற்கு முன்னர் கல்லூரி அதிபராக கடமையாற்றியிருந்த பயஸ் ஆனந்தராஜா கடந்த வருடம் (2022) டிசம்பர் 30ஆம் திகதி தனது சேவையில் இருந்து ஒய்வு பெற்றிருந்தார்.
இதனையடுத்து அந்த வெற்றிடத்திற்கு பதில் அதிபராக ஒரு ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அந்த ஆசிரியையின் நியமனத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் முற்றுமுழுதாக ஏற்க மறுத்தனர்.
அத்துடன், புதிய அதிபராக அருட்தந்தை லொபோனை நியமிக்க வேண்டும் என தெரிவித்து, பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் வகுப்பறைகளை பகிஸ்கரித்தனர்.
அதன் பின்னர் அந்த இடத்திற்கு மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் அழைக்கப்பட்டு இந்த விடயம் தொடர்பில் ஆசிரியர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார்.
ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியில், ஆயரின் ஒப்புதலுடன் பதில் அதிபராக பிரபாகரன் கடமைகளைப் பொறுப்பெடுத்துக் கொண்டார்.
எனினும் நிரந்தமாக அதிபர் நியமிப்பதில் தொடர்ச்சியாக இழுபறி நிலை நிலவி வந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுாரிக்கான நிரந்தர அதிபர் நியமனமானது இலங்கை கல்வி நிர்வாக சேவையை சேர்ந்த அன்ரன் பெனடிக் ஜோசப்க்கு கல்வி அமைச்சில் வழங்கி வைக்கப்பட்டது.
அதற்கமைய புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் இன்றைய தினம் (25.08.2023) தனது கடமைகளை பொறுபேற்றுக் கொண்டார்.
கல்வி அமைச்சினால் கடந்த மே மாதம் 30 ஆம் திகதியன்று இலங்கையில் உள்ள 17 தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஜூலை 21ஆம் திகதி நேர்முகப்ரீட்சை இடம்பெற்றதுடன் பொதுச்சேவை ஆணைக்குழுவின் முறையான அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியான அன்ரன் பெனடிக் ஜோசப் இலங்கை கல்வி நிருவாக சேவையில் 2016 ஆம் இணைந்து கொண்டார்.
No comments: