News Just In

7/25/2023 07:41:00 AM

கடந்த 6 நாட்களாக காணாமல் போயுள்ள தாயையும் சிறுமியையும் தேடி பொலிஸார் தீவிர விசாரணை

ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் கடந்த 6 நாட்களாக காணாமல் போயுள்ள 21 வயதுடைய இளம் தாய் மற்றும் ஒன்றரை வயதுடைய மகளைத் தேடி ஹங்குரன்கெத்த பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த யுவதி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

ஹங்குரன்கெத்த ஹோப் பகுதியில் வசித்து வந்த சுரேந்த ராணி என்ற தாயும், தருஷிகா அபி என்ற சிறுமியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு கடந்த 17ஆம் திகதி மருத்துவ தேவைக்கருதி தனது மகள் அவரின் சிறிய மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக காணாமல் போன பெண்ணின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, அருகில் உள்ள சிசிரீவியில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன பெண்ணின் குடும்பம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அவரது கணவர் எப்பொழுதும் குடித்துவிட்டு பெண்ணுக்கு இடையூறு செய்வதாகவும், இதனை பொறுக்க முடியாமல் அவர் வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் குறித்த தாயும் மகளும் ஏதேனும் வீட்டில் பாதுகாப்பு கருதி தங்கியிருந்தால் ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 0718-591055 இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: