News Just In

2/03/2023 02:43:00 PM

சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபரின் கடன் அட்டைகள் மூலம் விமான சீட்டுக்கள் கொள்வனவு! வெளிவரும் தகவல்கள்




கொழும்பின் புறநகரான பெலவத்தையில் சொகுசு வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபரின் வாகனம் நீர்கொழும்பிலுள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி முதல் குறித்த தொழிலதிபர் காணாமல் போயிருந்த நிலையில், தனது சகோதரர் வீடு திரும்பவில்லை என அவரின் சகோதரி பெப்ரவரி முதலாம் திகதி வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பெலவத்தில் நிர்மாணப் பணியின் கீழ் உள்ள தொழிலதிபரின் வீடொன்றை சோதனையிட்டபோது அவர் அங்கு சடலமாக காணப்பட்டுள்ளார்.

தொழிலதிபரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பிரபல ஆடையகம் ஒன்றின் உரிமையாளரான ரொசான் வன்னிநாயக்க என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்ட நீச்சல் குளத்தின் அருகே இரத்தகறைகளும் காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விமான அனுமதிச்சீட்டுக்கள் கொள்வனவு

இதேவேளை உயிரிழந்த தொழிலதிபரின் பணப்பையில் இருந்து நான்கு கடன் அட்டைகள் காணாமல் போயுள்ளதுடன் அதன் மூலம் இந்தோனேசியாவிற்கு ஐந்து விமான அனுமதிச்சீட்டுக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு விற்பனையகம் ஒன்றில் இருந்து 5 இலட்சம் ரூபாவுக்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: