News Just In

1/03/2023 11:49:00 AM

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் உறுப்பினர்களுடன் தொடர்பு ; காத்தான்குடியைச் சேர்ந்தஒருவர் கைது



இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரை நேற்று திங்கட்கிழமை (ஜன 2) இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் கோயம் புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோர் டிசம்பர் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் குற்றவியல் சதித்திட்டத்தில் ஈடுபட்டதுடன், இலங்கையில் 2019 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய உவர் லெப்பை அஹமட் நுஸ்கீன் முகநூலில் தொடர்புகளை பேணிவந்துள்ளதாக இந்திய உளவுத்துறை விசாரணையில் தெரியவந்ததையடுத்து, இலங்கை உளவுத்துறைக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் காத்தான்குடி பழைய கல்முனை வீதி எம்.பி.சி.எஸ். குறுக்கு வீதியைச் சேர்ந்த குறித்த நபரை நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments: