News Just In

1/31/2023 06:41:00 PM

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 290 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதோடு, இன்று (31) மாலைவேளை மேற்கு நோக்கி நகரக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர், படிப்படியாக மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்து, நாளை (01) கரையை கடக்க கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று பிற்பகல் 04.00 மணி முதல் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்ட வளிமண்டலவியல் திணைக்களம், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போதும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments: