News Just In

12/24/2022 08:13:00 AM

கம்பஹாவில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!

சீதுவை - கொட்டுகொட வீதியில் கொட்டுகொட , கலிகன்எலிய சந்தியில் வைத்து டுபாயில் வசிப்பதாக கூறப்படும் பாதாள உலக உறுப்பினர் கம்பஹா பத்மாவின் நெருங்கிய சகா என அறியப்படும் கிஹான் என்ற மண் வர்த்தகத்துடன் தொடர்புபட்ட நபர், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23-12-2022) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, இலைக்கஞ்சி கொள்வனவுச் செய்வதற்காக கலிகன்எலிய பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போதே அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேலும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது இலைக்கஞ்சி விற்ற 62 வயது பெண்ணும் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்ணும், கிஹான் எனும் நபரும் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கிஹான் உயிரிழந்துள்ளதாகவும், காலில் குண்டடிபட்ட பெண் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் ரத்தொலுகம, ராஹுவல வீதியைச் சேர்ந்த 39 வயதான கிஹான் காஞ்சன பெரேரா எனும் நபராவார்.

குறித்த நபர் மீது 11 தோட்டாக்கள் தீர்க்கப்பட்டிருந்ததாகவும், கைத்துப்பாக்கியொன்று துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையாளிகள் கொலையின் பின்னர் சீதுவ பகுதி நோக்கி தாம் வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ, நீர் கொழும்பு வலய குற்றத் தடுப்பு பிரிவு, மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவு, சீதுவை பொலிஸ் நிலையம் ஊடாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக கூறினார்.

உயிரிழந்த நபர், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கம்பஹா - பட்டபொல பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் ஒருவரின் கொலை தொடர்பில் கொலையாளிகளுக்கு தகவல் வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கொலையாளிகளை கைதுசெய்ய மேலதிக விசாரணைகள் பல கோணங்களில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: