News Just In

12/22/2022 10:20:00 AM

போதைவஸ்து பாவனையை தடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கைச்சாத்து!



நூறுல் ஹுதா உமர்

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சாரப் பீடத்திற்கும் இலங்கை மது மற்றும் போதைவஸ்து தகவல் நிலையத்திற்கும் (ADIC) இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று அப்பீடத்தின் கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தமானது “பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வையும் அறிவையும் ஊட்டி, பிராந்திய, சமூக பிரச்சினைகளை கையாளச் செய்தல்” எனும் கூட்டு நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம் பாஸில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இப்புரிந்துணர்வு உடன்படிக்கையினூடான நிகழ்ச்சித்திட்டமானது சமூகவியல் துறை மாணவர்களை வலுவூட்டுவதை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்தது.

இந்நிகழ்வின் வரவேற்புரையினை சமூகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் எஸ்.எம் அய்யூப் நிகழ்த்தினார். பின்னர் ஒப்பந்தம் தொடர்பான பின்புலத்தை உணவு மற்றும் ஔடத முன்னாள் பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் நிகழ்த்தினார்.அதனைத் தொடர்ந்து, தலைமை உரையினை பீடாதிபதி பேராசிரியர் எம்.எம் பாஸில் வழங்கினார். பின்னர் இலங்கை மது மற்றும் போதைவஸ்து தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமணசேகர சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில், சர்வதேச அனுபவங்களோடு கூடிய உள்நாட்டில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய போதைவஸ்து பாவனையை தடுப்பதற்கான அணுகுமுறைகள் குறித்த பரந்துபட்ட தனது பார்வையை வெளிப்படுத்தினார். ADIC க்கின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் ஏ.சி.றஹீம் தனது உரையில் ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்தும் முறைபற்றி விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்வின் பிரதம அதிதி தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் உரையாற்றினார். உபவேந்தர் தனது உரையில், மாணவர்கள் வலுவூட்டப்படுவதனூடாக இன்றைய இலங்கைச் சமூகம் எதிர்நோக்கியிருக்கும் போதைவஸ்து பாவனையின் அதிகரிப்பில் இருந்து விடுபடச் செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அதனூடாக நிலைத்து நிற்கக் கூடிய சமூக வலுவூட்டலை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார். மேலும், அவர் கருத்து வெளியிடுகையில், இந்த உடன்படிக்கையினூடான நிகழ்ச்சித்திட்டமானது ஏனைய பீடங்களுக்கும் பரவலடையச் செய்யப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

இதன் பின்னர் மாணவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இறுதியாக, நிகழ்வில் நன்றியுரையினை சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம் றிஸ்வான் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பதிவாளர், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், சிரேஷ்ட உதவிப் பதிவாளரகள், உதவி விரிவுரையாளர்கள், போதனை சாரா ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


No comments: