News Just In

12/28/2022 08:02:00 AM

23 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!

23 வருடங்களின் பின்னர் புகையிரதத்தில் கொழும்பு கோட்டைக்கு மரக்கறிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் ஒன்றியம் மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கமைய, புகையிரதத்தில் மரக்கறிகளை ஏற்றிச் செல்வதற்காக புகையிரத திணைக்களத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவினால் ஐந்து விசேட பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

முன்னோடித் திட்டமாக நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு காய்கறிகள் போக்குவரத்து நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்பித்ததுடன், சிறப்பு ரயில் நள்ளிரவு 12 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடைந்துள்ளது.
கொழும்பில் உள்ள சுப்பர் மார்க்கட் மற்றும் மெனிங் சந்தைக்கு தேவையான மரக்கறி சரக்குகள் அந்த புகையிரதத்தில் கொண்டு செல்லப்பட்டாலும் அந்த புகையிரதத்தில் பயணிகள் பயணிக்க வாய்ப்பில்லை என ரயில்வே திணைக்களத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வஜிர பொல்வத்தேகம தெரிவித்தார்.

இதன்மூலம் நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் எனவும், இத்திட்டத்தின் குறைபாடுகளை ஆராய்ந்து அடுத்த வருடம் முதல் மாதம் முதல் புகையிரத சேவை தொடரும் எனவும் பிரதி ஆணையாளர் தெரிவித்தார்.

மலையகப் பகுதிகளில் விளையும் காய்கறிகள், பூக்கள் மற்றும் பழங்கள் நுவரெலியாவைத் தவிர, பண்டாரவளை மற்றும் வெலிமடை பகுதிகளில் விளைவிக்கப்படும் மரக்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள், நானுஓயா புகையிரதத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புகையிரத நிலையங்களுக்கும் இந்த புகையிரதத்தில் பூக்கள் மற்றும் மலர்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நானுஓயா புகையிரத நிலையத்தின் நிலைய அதிபர் ஜனக விரசிங்க தெரிவித்தார்.


No comments: