News Just In

9/15/2022 05:41:00 AM

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களுக்கான அழைப்பை புறக்கணித்த நாமல்!

விளையாட்டுத்துறையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் வெற்றிக்காக முன்னாள் விளையாட்டு அமைச்சர்களின் அனுபவத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களின் சந்திப்பு நேற்றுமுன்தினம் (13) கொழும்பில் நடைபெற்றது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த சந்திப்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவில்லை.

விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த அனைவரும் அழைக்கப்பட்ட இச்சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் என்ற ரீதியில் விளையாட்டுத்துறையின் கடந்த கால அனுபவங்கள் மூலம் எதிர்காலத்தில் விளையாட்டுத்துறையை கட்டியெழுப்புவதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டன.

அந்தக் கலந்துரையாடலில், அனைத்து அமைச்சுக்கள், நிறுவனங்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள், விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஏனைய நிறுவனங்களை கலந்துரையாடலில் ஒருங்கிணைத்து பொதுவான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது மிகவும் காலத்திற்கேற்ற செயற்பாடாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல மாற்றங்கள் மற்றும் விளையாட்டுச் சட்டம் மற்றும் தேசிய விளையாட்டு சாசனத்தில் சேர்க்கப்பட வேண்டிய பல முன்மொழிவுகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஜீவன் குமாரணதுங்க, காமினி லொகுகே, மஹிந்தானந்த அளுத்கமகே, நவீன் திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, பைசர் முஸ்தபா, ஹரின் பெர்னாண்டோ மற்றும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க, அதன் செயலாளர் திருமதி சுஜானி போகொல்லாகம மற்றும் விளையாட்டு விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை ஆலோசகர் சுதத் சந்திரசேகர மற்றும் விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள பலரும் கலந்துகொண்டனர்.

No comments: