News Just In

8/27/2022 09:01:00 AM

பிசாசுகளிடம் இருந்து சமூக உரிமைகளை பெற விமர்சனங்களை கடந்து எங்களை நாங்கள் தியாகம் செய்தோம் : இளைஞர்கள் மத்தியில் ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு




நூருல் ஹுதா உமர்
காலம் எமக்கு சாதகமாக அமைந்திருக்கும் போது விதண்டாவாதம் பேசிக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்பதனால் காலத்தை கவனத்தில் கொண்டு துரிதமாக இயங்க ஆரம்பித்துள்ளோம். விமர்சனங்களுக்கு அஞ்சி கோழைத்தனமாக ஒதுங்க முடியாது. வரலாற்றில் எப்போதும் இல்லாதவகையில் ஒரு நல்ல நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் அரகலவின் பின்னர் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மை மக்கள் தொடர்பில் நல்லபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் தமிழ் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டிய தருணமிது. அதற்காக மத்தியிலும் அதிகார பரவலாக்க முறையை உருவாக்க வேண்டும். இப்போது அமைச்சர் பதவியென்பது கணக்கில்லா நிலைக்கு வந்துவிட்டது. சமூகத்தின் அதிகாரம் ஓங்க முதல் மூன்று இடங்களுக்குள் ஒன்றில் நாம் அமர வேண்டும். அதுதான் தமிழ்- முஸ்லிம் ஆகிய இரு சமூகத்திலிருந்தும் இரு உப ஜனாதிபதி பதவிகள். இந்த நிலைப்பாட்டை தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் கடந்த 2000 ம் ஆண்டு அரசியலமைப்பு நகலாக பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மாலை அட்டளைச்சேனையில் இடம்பெற்ற இளைஞர்கள் சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,
ஜனாஸாக்கள் பற்றியெரிந்த போது அந்த குடும்பங்கள் அடைந்த வலியை எமது பிரமுகர்கள் உள்ளார்ந்தமாக உணர்ந்திருக்கவில்லை. அதிலிருந்து சமூகத்தை காக்க நாங்கள் ரஸ்யாவின் புட்டினிடமோ அல்லது அமெரிக்கவின் ஜோ பைடனிடமோ தீர்வை கோர முடியாது. அன்று அதற்கான தீர்வை தரும் அதிகாரம் ஜனாதிபதியாக இருந்த கோத்தாவிடமே அன்று இருந்தது. அவர் பேயாக, பிசாசாக இருந்தாலும் கூட தீர்வு அவரிடம் தான் இருந்தது. அதனால் தான் சமூகத்தின் ஏச்சுக்களுக்கு பயந்துகொண்டு கோழைத்தனமாக ஒதுங்கியிராமல் துணிந்து எங்களை பலிகொடுத்து அந்த நாட்களை வெற்றிகொண்டோம். கடந்த காலங்களில் சமூக நலனுக்காக நல்ல கருத்துக்களை முன்வைத்த தலைவர் அஸ்ரபுக்கே முட்டை வீசிய சமூகத்திலிருந்து பாராளுமன்றம் சென்ற நாங்கள் பழிச்சொற்கள் வரும், அபாண்டங்கள் வரும், ஏச்சுப்பேச்சுக்கள் வரும் என்பதெல்லாம் தெரியாமல் அரசியல் செய்ய வில்லை. சமூகத்தின் வலியை போக்க அவர்களுடன் சென்று பேசினோம்.
அதன் பலனாக ஜனாஸா எரிப்பை நிறுத்தினார்கள், மார்க்க சட்டங்களில் கை வைப்பதிலிருந்து பின் வாங்கினார்கள், காதி நீதிமன்ற விவகாரத்தில் அவர்கள் பின் வாங்கினார்கள். அவைகளெல்லாம் சமூகத்துக்கு கிடைத்த நன்மைகளே. 20 இல் வலியுறுத்தப்பட்ட விடயம் தலைவர் அஸ்ரப் விரும்பிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே. மு.கா தலைமைத்துவ கோட்பாட்டை நாங்கள் மீறி செயற்பட வில்லை. மஜ்மா நகரில் 4 ஆயிரத்துக்கு அதிகமான ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவைகளெல்லாம் நாங்கள் 20க்கு ஆதரவளித்ததன் மூலம் அந்த பிசாசுகளிடமிருந்து பெறப்பட்ட நன்மைகள்.
புதிய ஜனாதிபதியாக ரணில் தெரிவானவுடன் அவரிடம் எங்களின் சொந்த சலுகைகள் தொடர்பில் நாங்கள் பேச செல்லவில்லை. சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வையே முன்வைத்தோம். அதில் முக்கியமாக அமைந்த தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களை பற்றி எடுத்துரைத்தோம், மீனவர்கள், விவசாயிகளின் பிரச்சினைகள், காணி பிரச்சினைகள், நிர்வாக எல்லை பிரச்சினைகளை பற்றி பேசினோம். அதுபோல பல நூற்றுக்கணக்கான பிரச்சினைகளை பேசியுள்ளோம். நாங்கள் முன்வைத்த பிரச்சினைகளை தீர்த்து கொடுக்குமாறு குறித்த இலாகாக்களுக்கான அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அதில் இப்போது தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் தடைநீக்க நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. மீனவர்கள்- விவசாயிகளின் எரிபொருள் பிரச்சினைக்கான தீர்வு கிட்டவுள்ளது.
சம்பந்தன் ஐயா அவர்கள் ஒரு காலத்தில் குறிப்பிடுவார் வடக்கு கிழக்கை இணைத்து அதில் முஸ்லிம் முதலமைச்சரை நியமிப்போம் என்று. அது அவரது எண்ணம். அது நிரந்தர தீர்வல்ல நிரந்தர தீர்வு இப்போது இருப்பது போன்று தனித்தனியாக இருப்பதே என்றார்.


No comments: