நாடளாவிய ரீதியிலும் , தலைநகர் கொழும்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மாலை 4 மணிக்கு விசேட கட்சி தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று மதியம் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அவரச கட்சி தலைவர் கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்ததோடு , பாராளுமன்றத்தைக் கூட்டுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே சபாநாயகர் கட்சி தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். பாராளுமன்ற கட்டட தொகுதியில் கட்சி தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன் போது அவசர பாராளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: