News Just In

7/04/2022 07:52:00 PM

பட்டினியால் வாடும் பிள்ளைகள் ; இலங்கையில் நடுவீதியில் தேம்பியழுத இளம் குடும்பஸ்தர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் அவல நிலையை எடுத்துக்கூற வார்த்தைகள் இல்லை.

அவ்வாறு பாதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சாப்பாட்டு இன்மையில், தன்னுடைய பிள்ளைகள் பால் கேட்டு அழுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனத் தெரிவித்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதானவர், ஹெம்மாத்தகம பிரதான நகரின் நடுவீதியில், தேம்பியழுதுகொண்டிருந்த சம்பவம் பார்ப்பவர் நெஞ்சங்களை உருகவைத்துள்ளது.
பதாகையொன்றை வைத்து, அழுதுகொண்டிருந்த அவரை பார்த்த பொலிஸார், வர்த்தகர்கள் மற்றும் நகரத்தில் இருந்தவர்கள், அவருக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக்கொடுத்துள்ளனர். மேசன் வேலைச் செய்யும் அவருக்கு 7 வயதில் பெண் பிள்ளையம் 13 வயதில் ஆண்ணொருவரும் இருக்கின்றனர். அவருடை மனைவிக்கு ஒரு வேலையுமில்லை.

பொருளாதார நெருக்கடி காரணமாக சீமெந்து விலை அதிகரித்துள்ளதனால், அவருக்கு முறையாக வேலைக்கிடைப்பதில்லை. “மேசன் சங்கமே பொறுமை காத்தது போதும், பொருட்களின் விலைக​ளை குறைத்து, ஏழ்மையானவர்களுக்கு நிவாரணம் கொடு” என அந்த பதாகைளில் எழுதப்பட்டிருந்தது.

7 வயதான பெண் பிள்ளை, பால் கேட்டு அழுகிறது. பிள்ளைகளுக்கு பால் மட்டுமல்ல, தன்னுடைய குடும்பத்தில் சகலருக்கும் நாளாந்தம் மூவேளையும் சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை என கூறிய குடும்பஸ்தர் எனக்கு வேலைக்கிடைப்பதில்லை என்பதால், பிள்ளைகளை வளர்க்கமுடியவில்லை” என கண்ணீருடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரதான வீதியில் அமர்ந்திருந்தவரின் அருகில் சென்று பொலிஸார் விசாரித்த பின்னர், அங்கு குழுமியிருந்தவர்கள் இன,மத,மொழி பேதங்களை மறந்து, தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர்.

கிடைத்த உதவிகளைக் கொண்டு, அந்நபருக்கு தேவையான பொருட்களை பொலிஸாரும், பொதுமக்களும், வர்த்தகர்களும் பெற்றுக்கொடுத்தனர்.

அதன்பின்னர், பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வீட்டுக்குச் செல்வதற்கும் வாகன உதவியும் செய்துகொடுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

No comments: