News Just In

6/15/2022 07:34:00 PM

மட்டு.மாநகர எல்லைக்குள் மாணவர்களுக்கென தனியான துவிச்சக்கர வண்டிப் பாதை அமைப்பு தொடர்பான கலந்துரையாடல்!

சிறுவர் சிநேக மாநகர கட்டமைப்பின் கீழ், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதிப்படுத்தும் வகையில் துவிச்சக்கர வண்டிப் பாதைக்கான ஒதுக்கீட்டு ஒழுங்குகளை மேற்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடலானது இன்று (15) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானது யுனிசெப் மற்றும் செரி (CERI) நிறுவனங்களுடன் இணைந்து சிறுவர் நேய மாநகர செயற்றிட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.

இந் நிலையில் மாணவர்களின் தேக ஆரோக்கியத்தினையும், பாதுகாப்பான பயணத்தினையும் உறுதிசெய்யும் வகையில் பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களின் நெருசலினை கட்டுப்படுத்துவதன் ஊடாகவும், ஒற்றைவழி பாதை ஒழுங்குகளை மேற்கொள்வதன் மூலமாகவும் மாணவர்களின் துவிச்சக்கர வண்டிப் பாதையானது சைகை பலகைகளின் காட்சிப்படுத்தலுடன் அமைக்கப்படவுள்ளது.

உடற்பருமன் அதிகரிப்பினால் அவதியுறும் மாணவர்களின் நலன் கருதி, சிறுவர் நேய மாநகர கட்டமைப்பின் ஊடாக முதற்கட்டமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாடசாலைகளில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் துவிச்சக்கர வண்டிப் பாவனையினை அதிகரிக்கும் நோக்கில் பாதுகாப்பான போக்குவரத்து ஒழுங்குகளை போக்குவரத்து பொலிஸார் மற்றும் வீதிப் போக்குவரத்தோடு தொடர்புடைய திணைக்களங்களின் துணையுடன் மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது கருத்து மாநகர முதல்வர் கருத்து தெரிவித்தார். அத்துடன் இதன் ஊடாக எதிர்காலத்தில் மாணவர்களின் தேக ஆரோக்கியம் பேணப்படுவதோடு, மாணவர்கள் சுயமாக பாடசாலைக்குச் சென்று வரக் கூடிய ஓர் பாதுகாப்பான சூழல் உருவாகும் என தான் எதிர்பார்ப்பதாகவும் இந் நடைமுறை வெற்றியளிக்கும் பட்சத்தில் மாநகரம் முழுவதுமாக இத்திட்டத்தினை விரிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் ஜீலை மாதம் 4ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புளியந்தீவு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு சென்று வரக் கூடிய வகையில் துவிச்சக்கர வண்டிகளுக்கென தனியான வழிப்பாதை ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில், பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்து பிரிவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பொறுப்பதிகாரி பி.பி.ஏ.சரத் சந்திர, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவிற்கான நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கே.பின்னவல, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஏ.எல்.எம்.சர்ஜீன், கிழக்கு பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி ஜீ.ஆர்.ரஜீவன், வைத்திய கலாநிதி கே.அருள்நிதி, யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் நேய செயற் திட்டத்திற்கான கொரியா நாட்டின் தொண்டர் கேயோரே டூ, யூனிசெப் நிறுவனத்தின் நிபுணத்துவ அலுவலர் டில்ருக்சி பிறுந்தன், செரி (CERI) நிறுவனத்தின் திட்ட அலுவலர் மைக்கல் நிரோஷன் தேவராஜா, அதன் இணைப்பாளர் றினோஷா பிரசன்னா உள்ளிட்டவர்களுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர்ககள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









No comments: