News Just In

6/09/2022 07:17:00 PM

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017/18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதி, காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயிற்சிநெறியானது, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக சில வருடங்கள் காலதாமதமானதுடன், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடந்த வருடம் இதற்கான இறுதிப் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இதில் 41 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், அந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வே இவ்வாறு இடம்பெறவுள்ளது.

மேலும், இந்த நிகழ்வினை நடாத்துவதன் நோக்கமானது, எமது பல்கலைக்கழகத்தில் கற்று சிறந்த ஊடகக் கலாச்சாரம் ஒன்றினை உருவாக்க முன்வந்துள்ள இம் மாணவர்களின் திறமையைப் பெரிதும் பாராட்டுவதுடன், ஒரு ஒழுக்கமான ஊடக கலாச்சாரம் ஒன்றினை இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் தோற்றுவிப்பதற்கு இவ்வாறான பயிற்சி நெறிகள் மிகவும் பெறுமதியானதாகும்.


எனவே, இவ்வாறான பயிற்சி நெறிகளை இனி வரும் காலங்களில் எமது பல்கலைக் கழகத்தில் தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கு தான் திட்டமிட்டுள்ளதாகவும், பயிற்சி நெறியின் பின்னர், நாட்டிலும் சர்வதேசத்திலும் ஊடக தர்மத்தினைப் பேணக்கூடிய நல்ல ஊடகவியலாளர்கள் உருவாக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவுமே இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதேவேளை இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தகைசார் விரிவுரையாளரும், பேராசிரியருமான கலாநிதி ஏ. சண்முகதாஸ் கலந்து கொண்டு பிரதான உரை நிகழ்த்தவுள்ளதுடன், பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவரும், இப்பயிற்சி நெறியின் இணைப்பாளருமான பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் தலைமைப் பேராசிரியரும், வெளிவாரி கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளருமான பேராசிரியர் எம்.எச் தௌபீக் உள்ளிட்ட இப்பயிற்சி நெறியின் அனைத்து வளவாளர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக உபவேந்தர் மேலும் தெரிவித்தார்.

பைஷல் இஸ்மாயில் 

No comments: