News Just In

5/12/2022 06:50:00 PM

சற்றுமுன்னர் பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க!

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.
புதன்கிழமை (11) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடிய விக்ரமசிங்க, திங்கட்கிழமை (9) மகிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவைத் தொடர்ந்து புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

எவ்வாறாயினும், புதிய பிரதமராக விக்ரமசிங்கவை நியமிக்கும் நடவடிக்கைக்கு பல தரப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் பதவியேற்றுள்ளார்.

அரச தலைவர் ரணசிங்க பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் 1993 - 1994 வரை அவர் முதலில் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 2001 முதல் 2004 வரை அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க அரச தலைவராக இருந்த காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை வழிநடத்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

ஜனவரி 2015 இல், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் அவர் கூட்டணி அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் ஆகஸ்ட் 2015 பொதுத் தேர்தலில் இலங்கை மக்களால் அங்கீகரிக்கப்பட்டது.

மீண்டும், 2018 டிசம்பரில், அப்போதைய அதிபர் சிறிசேனா, 2018 ஒக்டோபரில் அவரைப் பதவி நீக்கம் செய்த பின்னர், அவரைப் பிரதமராக நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நவம்பர் 2019 இல், ஐக்கிய தேசியக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர் தோல்வியடைந்ததை அடுத்து, அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க தற்பொழுது ஆறாவது தடவையாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments: