News Just In

4/21/2022 01:24:00 PM

கோட்டாபயவிற்கும் மகிந்தவிற்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடு!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து விட்டு, நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க மீண்டும் 19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வர தயாராகி வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சில வாரங்களாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடுமையான அரசியல் ஸ்திரமற்ற நிலைமை காணப்படுகிறது.

அவர்களில் பலர் தற்போது எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றுள்ள 11 கட்சிகளின் கூட்டணியினர் கோருவது போல் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என தெரிவித்து வருவதாக தெரியவருகிறது. அதேவேளை பதவி விலகல் ஒன்று நடக்குமாயின் ஜனாதிபதியே பதவி விலக வேண்டும் என இவர்களில் சிலர் கூறி வருகின்றனர்.

அத்துடன் அண்மையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் நியமனங்கள் ஜனாதிபதியின் தெரிவே அன்றி, பிரதமரிடம் கருத்துக்கள் எதுவும் கேட்டறியப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே பிரதமர் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை எனவும் பேசப்பட்டது.

பிரதமர், சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அமைச்சரவையில் சேர்க்குமாறு கோரியிருந்தார். எனினும் இளையவர்களை கொண்ட அமைச்சரவையை நியமிப்பதன் மூலம் எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்தி நாட்டை வழமை நிலைமைக்கு கொண்டு வர முடியும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதனிடையே சில ஷரத்துக்களில் திருத்தங்களை செய்து, 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க பிரதமர் மகிந்த ராஜபக்ச தயாராகி வருகிறார்.




ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, 19ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, நெருக்கடிக்கு உடனடித் தீர்வு என்ன என்பது தொடர்பில் சர்வகட்சித் தலைவர்களுடன் இரண்டு நாள் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.

இன்றும் நாளையும் கட்சித் தலைவர்கள் கூடி யோசனைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும் என்பது அனைத்துக் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டைக் கோரும் யோசனைகளில் ஒன்றாக இருக்கும் எனவும் தெரியவருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டால், வெள்ளிக் கிழமைக அந்த முடிவு சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட்டு, பின்னர் சபாநாயகர் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவார் எனவும் கூறப்படுகிறது.

எனினும் ஜனாதிபதி பதவி விலகுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என அந்த ஆங்கில ஊடகம் கூறியுள்ளது.

No comments: