News Just In

4/11/2022 07:54:00 PM

தேசிய "கமசமக பிலிசந்தர வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

அதிமேதகு ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவின் கீழ் தேசிய "கமசமக பிலிசந்தர" வேலைத்திட்டத்தின் கீழ் முதற்தொகுதியாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இன்று(11) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

"கமசமக பிலிசந்தர" வேலைத்திட்டத்தின் கீழ் வரவுசெலவுத்திட்டம் 2022 க்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற "கிராமத்துடன் உரையாடல்" கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை செயற்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்பற்றைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களினூடாக முழு வேலைத்திட்டத்தையும் முன்னுரிமை அடிப்படையில் வேலைத்திட்டமாக செயற்படுத்தப்படுகின்றது.

மேலும் கிராமிய மட்ட உட்கட்டமைப்பு வசதிகள், வீதிகள் என்பவற்றை உடனடியாக சீரமைத்து பிராந்திய ரீதியிலான புத்தெழுச்சியை கட்டியெழுப்புவதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி கருத்திட்டங்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளது.

01. வாழ்வாதார அபிவிருத்தி - 40%

02. பொது உட்கட்டமைப்பு அபிவிருத்தி - 40%

03. சுற்றாடல் மற்றும் நிலையான அபிவிருத்தி - 10%

04. சமூக நலன் மற்றும் சமூக அபிவிருத்தி - 10%

மேற்படி கமசமக பிலிசந்தர வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸின் பாவா,சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எம் நியாஸ்,எம்.எஸ் ரியாஸ்,மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(சர்ஜுன் லாபீர்)

No comments: