News Just In

1/06/2022 08:07:00 PM

மண்கும்பானில் அமைக்கப்பட்ட படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவினால் திறந்து வைப்பு!

யாழ். மண்கும்பான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையம் என்பன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வியாழக்கிழமை 06.01.2022 அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

வெளிநாட்டு மற்றும் இலங்கை தனியார் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள குறித்த படகு கட்டும் தொழிற்சாலை மூலம் மண்கும்பான் பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கான பொருளாதார நன்மைகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2009 இற்கு பின்னரான சூழலில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்திகளை உருவாக்கி, அழிந்த வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டும் என்ற வேலைத் திட்டத்தின் வெளிப்பாடாக இவ்வாறான தொழிற்பேட்டைகள் எமது பிரதேசங்களில் தற்போது உருவாகி வருவதாக இந்த படகு கட்டும் தொழிற்சாலையை அங்குரார்ப்பனம் செய்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் தீவக பகுதியில் வேலைவாய்ப்பு இன்றி காணப்படும் இளைஞர் யுவதிகளுக்களின் தொழில் முயற்சிக்கான வாழ்வாதாரத்தின் பெற்றுக்கொடுக்க சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ”கடற்பரப்பிலான துரித அபிவிருத்தி சேவையிலான பங்களிப்பினை வழங்க தனியார் முதலீட்டாளர்கள் முன்வந்த நிலையில் இதற்கான நடவடிக்கை அரசாங்கத்தினால் முன்னேடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு மிகுந்த நன்றியினை தெரிவித்துகொள்ளுகின்றேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ் நிகழ்வில் இலங்கை கப்பற்துறை கூட்டுத்தாபனத்தின் தலைவர் வீரமன்னன் ராஜவே, வடபிராந்திய கடற்றொழில் கட்டளைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா, யாழ் இந்திய உதவித்துணைத் தூதரகத்தின் பதவிநிலை அதிகாரி டீ.கேசர், வேலணை பிரதேச சபையிழன் தலைவர் கருணாகரகுருமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் சுற்றுலாத்துறை அதிகாரிகள், வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே படகு கட்டும் தொழிற்சாலை பணிகளுக்கான ஒரு வருடப் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.

மண்கும்பானில் வெளிநாட்டு - உள்ளூர் தனியார் முதலீட்டாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலைக்கான பணியாளர்களாக பிரதேச இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி அளிப்பதற்கு முதலீட்டாளர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.எச்.ஹுஸைன்






No comments: