News Just In

12/07/2021 06:05:00 PM

கல்முனையில் கட்டாக்காலி மாடு களாள் தொல்லை : களத்தில் இறங்கி கட்டுப்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறது கல்முனை மாநகர சபை !


கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் காட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் வாகனப்போக்குவரத்து நெரிசல் நிரம்பிய அவசர நேரங்களில் மட்டுமின்றி இரவு வேளைகளிலும் உள்ளதன் காரணமாக பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன் விபத்து சம்பவங்களும் இடம்பெறும் அபாயம் நிலவிவருகிறது. இது தொடர்பில் கல்முனை மாநகர சபை முதல்வர், ஆணையாளர், உறுப்பினர்கள் கவனம் செலுத்தி இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீபீனால் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றும் விடுக்கப்பட்டது.

கடந்த 2021 அக்டோபர் 06ஆம் திகதி வெளியிடப்பட்ட அந்த அறிவித்தலில் கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி ஆடு, மாடுகளின் தொல்லைகள் அதிகரித்திருப்பதால், அவற்றைக் கைப்பற்றி, உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்கபட்டிருக்கிறது. 07-10-2021 தொடக்கம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்படும் ஒவ்வொரு ஆடு அல்லது மாட்டுக்கும் நாள் ஒன்றுக்கு 5000 ரூபா வீதம் தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

கல்முனை மாநகர பிரதேசங்களில், குறிப்பாக பிரதான வீதிகள், சந்தைகள், பஸார்கள் மற்றும் பொது இடங்களில் கட்டாக்காலிகளின் தொல்லைகள் மீண்டும் அதிகரித்திருப்பதாகவும் இதனால் வாகன விபத்துகள் இடம்பெறுவதுடன் பயணிகளும் வர்த்தகர்களும் நுகர்வோரும் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மாநகர சபைக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன. இது சம்மந்தம்மாக பல தடவைகள் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டும், கட்டாக்காலிகளின் உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதாகத் தெரியவில்லை.

இவற்றைக் கவனத்தில் கொண்டு, மேற்படி நடவடிக்கையை முன்னெடுக்குமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆகையினால், குறித்த கட்டாக்காலி ஆடு, மாடுகளின் உரிமையாளர்கள், அவற்றை மிகவும் பொறுப்புடன் தமது இடங்களில் வைத்துப் பராமரிக்குமாறும் இல்லையேல், மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த கட்டாக்காலிகள் கைப்பற்றப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து மேற்கூறப்பட்ட பிரகாரம் தண்டப் பணம் அறவிடப்படும் என கல்முனை மாநகர சபை எச்சரிக்கை விடுக்கின்றது. முன்னரும் பல தடவைகள் கட்டாக்காலிகள் பல கைப்பற்றப்பட்டு, தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கையை கல்முனை மாநகர சபை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்திருந்தனர்.

ஆனாலும் இன்றுவரை அந்த செயட்பாடு அமுலில் இல்லாது வெறுமனே உள்ளதுடன் கட்டாக்காலி மாடுகள் வீதியில் அலைந்துதிரிகின்றமையினால் வாகன போக்குவரத்து நெரிசல் நிரம்பிய கல்முனை மாநகரில் பல்வேறு அசௌகரியங்களை பாதசாரிகளும், வாகன சாரதிகளும் எதிர்நோக்கி வருகின்றனர். இதனை அவசரமாக கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை மாநகர சபை நிர்வாகத்தை மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

நூருள் ஹுதா உமர்



No comments: