News Just In

12/29/2021 02:38:00 PM

கிழக்கில் தேர்தல் நடந்தால் ஆட்சியை தீர்மானிப்பதில் முக்கிய பொறுப்பில் முஸ்லிம் சமூகம் காணப்படும் : தே.கா இளைஞர் அமைப்பாளர் சமட் ஹமீட்





நூருல் ஹுதா உமர்
தமிழ் மக்களின் போராட்டம் நியாயமானது .அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதன் மூலம் வடகிழக்கு இணைப்பால் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் மேலோங்கும் என்பதே வெளிப்படை உண்மையாகும். அதேய நேரம் கிழக்கில் 34 சதவீதத்தை பெற்று ஓரளவு அரசியல் அதிகாரத்தோடு இருக்கும் முஸ்லிம் சமூகம் மாகாணங்களின் இணைப்பின் மூலம் வடகிழக்கில் 17 சதவீதமாக மாறும். இந்த நேரம் தேர்தல் நடந்தால் முஸ்லிம் சமூகம் ஆளும் தரப்பாகவோ. எதிர்தரப்பாகவோ வரமுடியாமல் போகும். முஸ்லிங்களின் அரசியல் அதிகாரம் நிர்மூலமாகும். இணைக்கப்படாத கிழக்கில் தேர்தல் நடந்தால் ஆட்சியை தீர்மானிப்பதில் முக்கிய பொறுப்பில் முஸ்லிம் சமூகம் காணப்படும் என தேசிய காங்கிரசின் மருதமுனை இளைஞர் அமைப்பாளர் சமட் ஹமீட் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சரியான தூரநோக்குடன் செயற்பட்டால் முஸ்லிங்களின் அரசியல் அதிகாரங்கள் இலகுவாக வெற்றி கொள்ளமுடியும். அது அவ்வாறு இருக்க 1987ல் தற்காலியமாக வடகிழக்கு இணைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தை தமிழ் தலைவர்கள் கண்டுகொள்ளவுமில்லை, கணக்கெடுக்கவுமில்லை. முஸ்லிம் சமூகத்தை மூன்றாம் தர பிரஜையா கூட ஏற்கவில்லை. ஆனால் 2006 ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினரின் வழக்கு மூலமும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களின் பல்வேறு முயற்சிகளின் காரணமாகவும் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டது.

இதன் பிற்பாடுதான் தற்போது தமிழ் தலைவர்கள் சட்டப்படி வடக்கையும் கிழக்கையும் இணைப்பது என்றால் . முஸ்லிம் சமுகத்தையும் அரவணைத்து முஸ்லிம் அரசியல் அதிகாரத்தையும் விட்டு கொடுக்க வேண்டும் என்ற ஞானம் பிறந்துள்ளது. இந்த ஞானம் வடகிழக்கு இணைந்திருந்திருந்தால் அவர்களுக்கு புரிந்திக்குமா? என்பதை முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் தலைமைகளும் தெரிந்து கொள்ளவேண்டும். எனவேதான் முஸ்லிம் சமூக தலைமைகள் முஸ்லிம் அரசியல் அதிகாரத்தை விட எமது எதிர்கால சந்ததிகளின் வாழ்வியல் சார்ந்தும் அதிகாரங்கள் சார்ந்தும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.


No comments: