ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்கொட்லாந்து விஜயத்தையடுத்து, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு நீதிகோரும் வகையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரிட்டன், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஸ்கொட்லாந்து ஆகியநாடுகளில் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்ட போரட்டம் மேலும் வலுவடைந்ததை பார்க்க கூடியதாக இருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கிளாஸ்கோ மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை காலை ஸ்கொட்லாந்திற்குப் பயணமானார்.
அவரது வருகையை அடுத்து இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரிட்டன், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து கடந்த ஒருவாரகாலமாக ஸ்கொட்லாந்தில் வெளியாகும் பிரபல பத்திரிகைகள் வாயிலாகவும் ஸ்கொட்லாந்தின் பொது இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டிஜிட்டல் காட்சிப்படுத்தல்கள் ஊடாகவும் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு நீதிகோரும் வகையிலான பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர்.
அந்தப் பிரசாரங்களின் வரிசையில் படுகொலையாளர்கள் மரங்களை நடுகின்றார்கள் என்ற தலைப்பில் ஸ்கொட்லாந்தின் த ஹெரால்ட் மற்றும் 'த நஷெனல்' ஆகிய பத்திரிகைகளில் பிறிதொரு விளம்பரம் வெளியாகியுள்ளது.
No comments: