News Just In

8/06/2021 07:07:00 AM

கொரோனா தடுப்பு மருந்தை பெற்று விட்டோம் என நினைத்து கவனயீனமாக செயற்பட வேண்டாம்- கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!!


(எப்.முபாரக்)
கொரோனா தடுப்பு மருந்தை பெற்று விட்டோம் என நினைத்து கவனயீனமாக செயற்பட வேண்டாம் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (05) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 8 இலட்சத்து 50 ஆயிரம் தடுப்பு மருந்துகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதில் 8 இலட்சத்து க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 7 இலட்சத்து 24 ஆயிரத்து 966 பேருக்கு முதலாவது தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ளதாகவும், 75701 பேருக்கு இரண்டாவது தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் குறிப்பிட்டார்.

அத்துடன் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 507 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஏழு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 230 covid-19 தொற்றாளர்களும், இரண்டு மரணங்களும் சம்பவத்துள்ளது.

அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் உட்பட்ட பகுதியில் 127 பேருக்கும், கல்முனைப் பிராந்தியத்தில் 81பேரும் 5 மரணங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 70 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதலாவது தடுப்பு மருந்தை பெற்றுவிட்டோம் எனும் எண்ணத்தில் கவனயீனமாக இருந்துவிட வேண்டாம் எனவும், கடமைகளுக்கு செல்பவர்கள் தொடர்ச்சியாக முகக்கவசங்களை அணியுமாறும், சமூக இடைவெளிகளை பேணி நடக்குமாறும், கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்குமாறும் மக்கள் அதிகளவில் இருக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டாம் எனவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: