News Just In

7/01/2021 01:24:00 PM

பணியாளர்களை நீக்காது, காக்குமாறு வர்த்தக சமூகம் மற்றும் தொழிலதிபர்களிடம் அரசாங்கம் வேண்டுகோள்...!!


பணியாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாத்து, இந்த தொற்று நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ. அவர்கள், நேற்று, அனைத்து தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கை ஆடை பிராண்டு சங்கம் (SLABA) மற்றும் இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA) ஆகியன எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் அவர்கள், எமது அரசாங்கம்தின்்சார்பாக இந்த கோரிக்கையை விடுத்தார்.

வங்கிக் கடன் நிவாரணம் பெற்றுக்கொள்ளல், ஆடைத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றல், கொவிட் வழிகாட்டுதல்களுக்கு அமைய ஆடை விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி பெறல், ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் (ETF)தொடர்பான பிரச்சினைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக மேற்படி கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி செயற்பாட்டிற்காகத் தனியான அமைச்சு அறிமுகப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை ஆடை பிராண்டு சங்கத்தின் தலைவர் லலந்த வதுதுர அவர்கள் இதன்போது தமது சங்கத்தின் சார்பில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட்-19 உலகளாவிய தொற்று நிலைமை காரணமாக இதுவரை சுமார் 24 மாதங்கள் காலமாகத் தமது வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதனைச் சுட்டிக்காட்டிய வர்த்தகப் பிரதிநிதிகள், தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நிதி அமைச்சின் ஊடாக அவசர நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.

வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து ஊழியர்களைத் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்துவது தமக்கு மிகவும் கடினமானதாக உள்ளமையால்,
அவர்களைப் பணிநீக்கம் செய்வதை தவிர தமக்கு மாற்று வழி இல்லை எனத் தெரிவித்த மேற்படி சங்கங்களின் பிரதிநிதிகள், அவ்வாறு பணியாளர்களை நீக்குவதும் தமக்கு கடினமான ஒரு செயற்பாடாக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

மேற்படி கலந்துரையாடலில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.சுஜீவா பள்ளியகுரு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments: