News Just In

7/27/2021 02:26:00 PM

மட்டக்களப்பு- ஏறாவூர் நகர சபை நிருவாகப் பிரிவில் 18 துணைச் சட்டங்களை உருவாக்க நகர சபை தீர்மானம்...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஏறாவூர் நகர சபை நிருவாகப் பிரிவில் நகர சபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கு நகர சபை நிருவாகம் தீர்மானித்திருப்பதாக அந்நகர சபையின் செயலாளர் எம்.ஆர். ஷியாஹுல் ஹக் தெரிவித்தார்.

நகர சபைக் கட்டளைச் சட்டம் 225இன் கீழ் இந்த முன்னெடுப்பு இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை 27.07.2021 நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தலைமையில் நகர சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போதே ஏறாவூர் நகர சபை நிருவாகப் பிரிவில் நகர சபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 18 துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கு நகர சபை நிருவாகம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி நகர சபைப் பிரிவில் வீதிகள் மற்றும் தெருக்களில் காட்சி நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது பற்றிய துணை விதி, தங்குமனைகள் தங்குமிடங்கள் பொதுச் சுகாதார பாதுகாப்பு வசதிகளை முகாமைத்துவம் செய்தல் கட்டுப்படுத்துதல் உணவகங்கள் ஊறுவிளைவிக்கும் மற்றும் ஆபத்து மிக்க வியாபாரம் தொடர்பான துணைவிதி தனியார் கல்வி நிறுவனங்கள் சிகை அலங்கார நிலையங்கள் தொடர்பான துணை விதி உள்ளிட்ட 18 துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கே ஆலோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபைச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் சேர்க்கப்பட வேண்டிய பரிந்துரைகளோடு தமது ஆலோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கும் ஏறாவூர் நகர உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.








No comments: