News Just In

6/21/2021 11:09:00 PM

மட்டக்களப்பில் இரசாயன மற்றும் பசளை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் திடீர் சுற்றி வலைப்பு- கடைகளுக்கு எதிராக வழக்குகள் தாக்கல்...!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இரசாயன மற்றும் பசளை விற்பனை செய்யும் வியாபார நிலையங்களுக்கு திடீர் சுற்றி வலைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் அக் கடைகளுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

ஆரோக்கியமான நச்சு அல்லாத உணவுக்கான மக்களின் உரிமையை உறுதி செய்வதற்காக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகள் மற்றும் களைநாசினிகளை இறக்குமதி செய்வதை அரசாங்கம் சமீபத்தில் தடை செய்தது.

அதே நேரத்தில், மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவலர்கள் அதிகார சபையினால் (CAA) இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இரசாயன உர விற்பனையாளர்கள் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்வதாகவும், உரங்களை தங்கள் கிடங்குகளில் மறைத்து வருவதாகவும் பல முறைப்பாடுகள் வந்ததற்கமைய கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில் இன்று சுற்றிவளைப்பு ஒன்று இடம் பெற்றது.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் அரசாங்க அதிபர் கே.கருணாகரன் வழிகாட்டுதலின் கீழ் உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில் இன்று கிரான்குளம்,செட்டிப்பாளயம்,களுதாவளை மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, மேற்படி பிரதேசங்களில் யூரியா உரங்கள் உள்ளதா? என்று விசாரிக்க இரசாயன விற்பனை நிலையங்கள் புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதற்காக இப்பகுதியில் உரங்கள் உள்ளிட்ட வேளாண்மை இரசாயனங்கள் விற்கும் கடைக்கு ஒரு புலனாய்வு நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டதாக ஆர்.எப்,அன்வர் சதாத் தெரிவித்தார்.

பின்னர் கடை உரிமையாளர்கள் யூரியா உரங்கள் தங்களது கடையில் இல்லை என்று கூறினார்கள் இருப்பினும், நுகர்வோர் அதிகார சபை மட்டக்களப்பு மாவட்ட அலுவலக அதிகாரிகள், களஞ்சியத்தை ஆய்வு செய்யச் சென்ற போது, அதில் ஏராளமான உரங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

பின்னர் களஞ்சியத்திலிருந்த உரங்கள் அனைத்தினையும் ரூபாய் 1500/-க்கு விவசாயிகளுக்கு களத்திலே வைத்து விற்பனை செய்தனர். அதனை விவசாயிகளும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்ததனை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன் அதிகாரிகளுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

மேலும் கடை உரிமையாளர்களுக்கு எதிராக உரத்தை விற்பனை செய்ய மறுத்த குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்,அன்வர் சதாத் மேலும் கூறுகையில், எதிர்காலத்தில் தேசிய உர செயலகத்தின் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்படும் , மேலும் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இந்த சோதனைகளில் பங்கேற்பார்கள், எதிர்காலத்தில் உரங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பான தகவலினை 0652228810 அல்லது 0770110096 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தரும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், தகவல் வழங்குபவர்களின் விபரம் இரகசியப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.






No comments: