News Just In

12/29/2020 06:07:00 PM

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச் சொந்தமான காணியை பிக்கு அபகரிக்க முயற்சி- நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் திடீர் தலையீடு!!


மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச் சொந்தமான காணியை 'மாதோட்ட' விகாரையின் பிக்கு அபகரிப்பு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச் சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருடக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பிலிருந்து வந்துள்ளது.

இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை கொண்டது.

அதன் பின்னர் குறித்த காணி திருக்கேதீச்சர ஆலயத்திடம் மீளவும் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட விகாரை ஆலய காணியிலும் தனியார் காணியிலும் அமைக்கப்பட்டிருந்தது.

மிகுதி காணி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்தது.

இந்தநிலையில் கடந்த தினங்களாக விகாரையில் பிக்கு மிகுதி காணியை அபகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

இன்று காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த காணி அபகரிப்பு தொடர்பாகத் துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் போது மன்னார் பொலிஸார், ஆலய நிர்வாகத்தினர், ஆலய பிரதம குரு ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.








No comments: