News Just In

12/23/2020 02:24:00 PM

மட்டக்களப்பு- நத்தார் பண்டிகை ஆராதனைகளில் பங்குகொள்ள 50 பேர்களுக்கு மாத்திரம் அனுமதி!!


மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் நேற்று (22) மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. க.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

நத்தார் பண்டிகை அதனை தொடர்ந்து புத்தாண்டு அதன்பின் பொங்கல்; பண்டிகை என தொடர்ச்சியாக பண்டிகை காலமாகையினால்; மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புடன் செயற்பட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற கொரோனாவில் இருந்து மக்களை மிகவும் அவதானத்துடன் செயல்படும்படி அரசாஙக அதிபர் வேண்டுகோள் விடுத்தார். 

தேவாலயங்களில் நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகளின் போது கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கிறிஸ்தவ பாதிரிமார்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனவே இவ் வேண்டுகோளின் அடிப்படையில் தேவாலயங்களுக்கு நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகளில் 50 பேர்கள் மாத்திரம் கலந்து கொள்ளலாம் எனவும் அங்கு வருகின்றவர்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும் எனவும் அவ்வாறு சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்பவர்களை அவதானிப்பதற்கு பொலிஸ் விசேட குழுவினருடன் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் அவர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது தவிர்க்க முடியாததாகும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

பண்டிகை காலங்களில் பொருட்களை கொள்வனவு செய்யவுள்ள மக்கள் கடைசிவரை காத்திருக்காது மக்கள் நெரிசல் ஏற்படாத வகையில் செயல்படுவது அவசியமாகும். கடை உரிமையாளர்கள் கவனமாக வாடிக்கையாளர்களை சுகாதார நடைமுறைகளுடன் நடத்துவது அவசியமானதாக கருதப்படுகின்றது.

இம்முறை எளிமையான முறையில் பண்டிகைகளை பொதுமக்கள் கொண்டாடுவது தான் கொரோனா தொற்றை குறைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என சுகாதார துறையினர் மக்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

கொரோனா தொற்றினை நமது இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி விரைவில் நமது நாட்டை கொரோனா அற்ற நாடாக மாற்றி இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகும்.




No comments: