News Just In

9/10/2020 02:27:00 PM

மட்டக்களப்பில் இடம்பெற்ற பட்டதாரி பயிலுநர்களுக்கு பயிற்சி வழங்குதல் சம்பந்தமான உயர்மட்டக் கலந்துரையாடல்!!


ஏ.எச்.ஏ. ஹஸைன் 
புதிய அரசாங்கத்தின் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விசேட திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்டு நியமனம் பெற்றுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்கு பயிற்சி வழங்குதல் சம்பந்தமான உயர்மட்டக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை 09.09.2020 இடம்பெற்றது.

இந்த பட்டதாரிப் பயிலுனர்களுக்கான 3 மாத தலைமைத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பாக பாதுகாப்புப் பிரிவினருடன் மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

புதிய நியமனதாரிகளுக்கு நிருவாகம், விவசாயம், மீன்பிடி, சுகாதாரம், நீர்ப்பாசனம், கல்வி, போக்குவரத்து, கைத்தொழில், உள்ளுராட்சி, தொடர்பாடல், தனியார் துறைகள் போன்ற 13 பிரிவுகளில் 39 அரசதுறை நிறுவனங்களிலும் தனியார்துறை நிறுவனங்களிலும் இத்தகைய பயிற்சிகளை வழங்குவதற்காக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கான 3 மாத தலைமைத்துவப் பயிற்சி பாதுகாப்புப் பிரிவினரால் வழங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விசேட கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் உட்பட பயிற்சிகளுக்குப் பொறுப்பான இராணுவ உயர்அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2088 பட்டதாரி பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் இதுவரை 1966 பட்டதாரி பயிலுனர்கள் மாத்திரமே 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தமது கடமையினைப் பொறுப்பேற்றிருக்கின்றனர்.

இவர்கள் கடமையினைப் பொறுப்பேற்கும் இறுதித் தினம் செப்டம்பர் 10 என அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது.





No comments: