நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டதன் பின்னணியில் எந்தவொரு அரசியல் பழிவாங்கள் செயற்பாடும் இல்லை என மத்திய மகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ.கமகே தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் எந்தவகையிலும் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலாவாக்கலை – லிந்துல நகரசபை, அக்கரபத்தனை மற்றும் கொத்மலை ஆகிய பிரதேச சபைகளில் நிலவும் உள்ளுராட்சி மன்றங்களின் குறைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று தலவாக்கலை டெனிஸ் கழக மன்றத்தில் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிதஹ ஆளுநர், “ரஞ்ஜன் ராமநாயக்க கைது செய்யப்பட்டதன் பின்னணியில் எந்தவொரு அரசியல் பழிவாங்கள் செயற்பாடும் இல்லை. இந்த அரசாங்கம் ஒருபோதும் அவ்வாறு செய்வதில்லை.
ஆனால் இதனை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக ஒரு குறிப்பிட்ட கட்சி தனது அரசியல் நன்மைக்காக கூறி வருகின்றது. அது தவறானதாகும். இந்த விடயம் பொலிஸாருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் உரிய முறையில் நீதியை நடைமுறைபடுத்துவார்கள்.
இந்த விடயத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றங்களும், சட்டமா அதிபர் திணைக்களமும், பொலிஸ் திணைக்களமும் உள்ளது. அவற்றின் ஊடாக நீதி நிலைநாட்டப்படும்.
எனவே தனிப்பட்ட முறையில் கருத்துக்களை தெரிவிக்காது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு இது குறித்த பொறுப்புகளை வழங்குவதே பொறுத்தமானதாகும்” என்றார்.

No comments: