News Just In

12/11/2019 06:33:00 PM

நிவாரணம் தேவையில்லை நிரந்தர வதிவிடமே வேண்டும்-நாவற்குடா மக்கள்


மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதி மக்கள் மழை ஓயும் வரையில் தங்களை நிரந்தரமான இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் தாழ்நிலங்கள் நீரிழ் மூழ்கியுள்ளதுடன், மக்கள் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஓய்ந்த மழையினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது இருப்பிடங்கள் திரும்பிய நிலையில், நேற்று காலை முதல் தொடர்ச்சியாக மீண்டும் பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதியில் மக்கள் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது.

இதனால் மழை ஓயும் வரையில் தங்களை நிரந்தரமான இடத்தில் தங்கவைக்குமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தாம் கடந்த 30 வருடமாக மழை காலங்களில் அகதி வாழ்க்கையையே எதிர்கொண்டு வருவதாகவும் தமது பகுதிக்கான வடிகான் வசதிகளை ஏற்படுத்தி தமது பிரச்சினையைத் தீர்க்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ள நிலையில் தம்மால் வீடுகளில் வசிக்கமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமக்கு நிவாரணமும் தேவையில்லை, சோறும் தேவையில்லை என்றும் மழைகாலங்களில் தமது பிள்ளைகளுடன் தாங்கள் நிம்மதியாக வாழவே விரும்புவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: