அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்பட்டு மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்துகொண்டிருந்த வேளையில், நல்லாட்சி எனும் போர்வையில் இந்த நாடு சிலரது கைகளுக்குள் சிக்குண்டு, சின்னாபின்னமாக்கப்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் தங்களுக்கு பேராதரவு தெரிவித்து ஆட்சி அதிகாரத்தையும் வழங்கியுள்ளனர்.
யுத்தகாலத்தில் வட,கிழக்கு மக்கள் எதிர்நோக்கிய கஷ்டங்களையும் இன்னல்களையும் தாங்கள் நன்கறிவீர்கள். இந்த நாட்டை மஹிந்த ராஜபக் ஷ பொறுப்பேற்ற போது அவரது தலைமையில் பாதுகாப்பு செயலாளராக இருந்த நீங்கள், சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்த நாட்டில் சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தி சரித்திரம் படைத்தீர்கள். அதற்குரிய நன்றிக்கடனாகவே, நாட்டு மக்களின் பேராதரவு உங்களுக்கு கிடைத்திருக்கின்றது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கு, பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரையும் நாட்டினுடைய பொருளாதாரத்தையும் நாம் இழந்திருக்கின்றோம். அதனாலேதான் எமது நாட்டில் வாழும் மக்கள் அச்சமின்றி சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய சூழல் உருவானது. இவ்வாறு மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் பெறப்பட்ட சமாதானத்தை சீர்குலைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் இன உறவில் விரிசலை ஏற்படுத்தி இந்த நாட்டில் மீண்டுமொரு பிரச்சினையை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளினால் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் தூண்டப்பட்டு எதிர்காலத்தில் இன மோதல்கள் கூட இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவது காலத்தின் தேவையாகும்.
கடந்த காலங்களில் தமிழ் மக்களை பிழையாக வழிநடத்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய பதவிகளை வகித்து, இந்த நாட்டுக்கு எதிராக யுத்தத்தையும் வழிநடத்திய கருணா அம்மான், முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் எனும் நோக்கில் செயற்படுகின்றனர் எனக்கூறுவது வேடிக்கையாகவுள்ளது. யுத்த காலத்தில் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் புரிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்து இந்த நாட்டை சீரழித்த அவர், சுயநல அரசியலுக்காகவே வீண்பழி சுமத்துகின்றார். அரசியல் அதிகாரம் ஒன்றினைப் பெறுவதற்காகவே அவர் இவ்வாறு செயற்படுகிறார்.
ஆயுதம் ஏந்தி எதனையும் சாதிக்க முடியாது என்பதனை உணர்ந்து கொண்ட கருணா அம்மான், அரசியல் நீரோட்டத்துக்குள் வந்து பதவிகளைப் பெற்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் இறுதியில் தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டார். அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் எந்தவொரு செல்வாக்கும் கிடையாது. அரசியல் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு, அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இனவாதம் பேசுகிறார். இவருடைய தீவிர செயற்பாடுகள் நாட்டி னுடைய பொருளாதாரம், மக்களின் சுதந்திரமான செயற்பாடுகள் என்பவற்றை பாதிக்கக்கூடும். அத்துடன், மலர்ந்துள்ள புதிய ஆட்சிக்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்திவிடும்.
எனவே அவரது நடவடிக்கைகள் தொடர் பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். அத்துடன் சமாதானத்தை குழப்பும் எவராக இருந்தாலும் தராதரம் பாராது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பி டப்பட்டுள்ளது.

No comments: