இது தொடர்பாக தமிழ்ப்பெண்களிடமிருந்து வந்த தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து மேற்படி திணைக்களத்திடம் கேட்கப்பட்ட போதே அதன் ஊடகப்பேச்சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த இத்தகவலை வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இலங்கை கடவுச்சீட்டு தரப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நாம் குறித்த சர்வதேச நியமங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருத்தல் அவசியம். ICAO எனப்படும்சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பானது புதிய கடவுச்சீட்டுக்கான படம் எப்படி இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை எல்லா நாடுகளுக்கும் வழங்கியுள்ளது.
அதன் படி கடவுச்சீட்டிலுள்ள படத்தில் முகத்தில் எந்தவிதமான செயற்கை அடையாளங்களும் இருக்க முடியாது. ஆகையால் நாம் நெற்றியில் பொட்டிருப்பதை தவிர்க்கச்சொல்கிறோம்.
கூடுதலாக ஐரோப்பிய நாடுகளுக்குச்செல்லும் பெண்களே பாதிப்படைகின்றனர். அதாவது பொட்டு உள்ள படத்தை கடவுச்சீட்டில் கொண்டிருக்கும் பெண்கள் சில சந்தர்ப்பங்களில் பொட்டு இடாது
சில நாடுகளுக்கு போகும் அவர்களை சில நாடுகளின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நிறுத்தி வைத்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமன்றி குறித்த நாடுகளுக்கான விசாக்களை பெறுவதும் இவர்களுக்கு சவாலாகவே இருக்கின்றன. இக்காரணங்களை வைத்து விசாக்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆகவே இது அவர்களின் நன்மைக்காகவேயன்றி வேறு தனிப்பட்ட காரணங்கள் கிடையாது. இருப்பினும் இது தொடர்பில் முரண்களும் ஏற்பட்டிருக்கின்றன.
நாம் இது தொடர்பில் மக்களுக்கு விளக்கங்களை கொடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார். ஊவா மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழர்கள் கண்டியில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கே சாதாரண கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கச்செல்வர்.
இந்நிலையில் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு படமெடுக்கும் புகைப்பட நிலையங்களில் எடுக்கப்பட்ட படங்களை மேற்படி திணைக்களம் நிராகரித்து பொட்டுகளை தவிர்த்து அங்கு மீண்டும் படமெடுக்க அழுத்தம் கொடுப்பதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.இதே வேளை நெற்றிப்பொட்டு என்பது தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடைய அம்சம் என்பதால் அதைத் தவிர்த்து படமெடுப்பதற்கு பெண்கள் தயங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: