News Just In

12/29/2019 06:23:00 PM

உன்னிச்சைக் கிராம மக்கள் குழாய் மூலமான குடிநீரைப் பெறுவதற்காக விண்ணப்பியுங்கள்

நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த உன்னிச்சைக் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் இப்போது நிறைவேறியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிலோ மீற்றர்களுக்கு அப்பாலிலுள்ள இடங்களுக்கும் உன்னிச்சைக் குளத்தில் இருந்து பெறப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்தது. எனிலும் மிகவும் வறுமைக்கோட்டிக்கு கீழ் வாழும், எவ் வகையிலும் இயற்கை நீரைப் பெற முடியாமல் இருந்த உன்னிச்சை மற்றும் அதனை அண்டிய கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளும் முன்னர் இருந்த எந்த ஆட்சியாளர்களாலும் எடுக்கப்படவில்லை.

இந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கடந்த ஆட்சிக் காலத்தில், பல்வேறு அமைச்சுகளுக்கூடாகவும் நிதிகளைப் பெற்று உன்னிச்சை, உன்னிச்சையை அண்டிய கிராமங்கள் மற்றும் பதுளை வீதியிலுள்ள கொடுவாமடு போன்ற கிராமங்களுக்கும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டதன் பயனாக நீர் வழங்கும் திட்டம் பூர்த்தியடைந்துள்ளது.

இன்று உன்னிச்சை கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ,

முறையான விண்ணப்பங்களை வவுணதீவிலுள்ள நீர் வழங்கல் அலுவலகத்திற்கு சமர்ப்பிப்பதன் மூலமாக ஆயித்தியமலை சந்தி தொடக்கம் உன்னிச்சை வரையான கிராம மக்கள் குடிநீர் இணைப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இலவச இணைப்புகளைப் பெறக்கூடியவர்களும், கட்டணம் செலுத்தி இணைப்புகளைப் பெறக்கூடியவர்களும் விண்ணப்பிக்க முடியும். இலவச இணைப்புகளை யாவர் பெறலாம் என்பதை வவுணதீவுப் பிரதேச உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொள்வதன் மூலமாக விண்ணப்பதாரிகள் அறிந்து கொள்ள முடியும். 

மேலும் , கட்டணம் செலுத்துனராயின் வீதியில் இருந்து 10 மீற்றர் இடைத் தூரத்தில் உள்ளவர்கள் ரூபாய் 17000/- இனையும் , 10 மீற்றர்களுக்குக் கூடுதலாகவும் 25 மீற்றர்களுக்கு உட்பட்டதாக இடைத்தூரமாயின் ரூபாய் 21000/- இனையும் செலுத்தி குடிநீர் இணைப்பினைப் பெற முடியும்.

உன்னிச்சை வரையான குழாய் பதிப்பதற்கான நிதி முன்னைய நீர் வழங்கல் அமைச்சில் இருந்தும் , உயர் அழுத்த நீர்ப்பம்மி நிலையத்திற்கான நிதி முன்னைய மீள் குடியேற்ற அமைச்சில் இருந்து பெறப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். உன்னிச்சைக் கிராம மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளமையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் எனப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.

மேலும் கரடியனாறு, பதுளை வீதி மற்றும் மண்முனை மேற்கு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளின் குடிநீர் வழங்கப்படாத ஏனைய கிராமங்களுக்கும் குடிநீர் வழங்குவதற்கான திட்டம் ஏற்கனவே செயற்படுத்த தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

No comments: