News Just In

12/11/2019 09:14:00 AM

அமைச்சுக்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் அடங்கிய விடயதானங்கள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று (10) வெளியிடப்பட்டுள்ளது.

29 அமைச்சர்களுக்கான விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.இந்த வர்த்தமானி 64 பக்கங்களைக் கொண்டுள்ளது.

அரசியலமைப்பின் 43-1 வது பிரிவு மற்றும் 46-1 வது பிரிவு ஆகியவற்றின் படி, அமைச்சர்களுக்கு உள்ளடங்கும் விடயங்கள், செயல்பாடுகள், திணைக்களங்கள், நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதி சட்ட நிறுவனங்கள் ஆகியன இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கமைவாக முப்படைகள், பொலிஸ் மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உட்பட்டுள்ளதுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவுனம் உள்ளிட்ட 31 நிறுவனங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

நிதி, பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ், திறைசேரி, மத்திய வங்கி, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் அனைத்து அரச வங்கிகள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் உட்பட 48 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அனைத்து மத விவகாரத் திணைக்களங்கள், தொல்பொருள் மற்றும் கலாச்சார அலுவல் திணைக்களங்கள் ஆகியன புத்த சாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அரச தகவல் திணைக்களம், அரசாங்க அச்சுத் திணைக்களம் மற்றும் அரச ஊடக நிறுவனங்கள் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவை திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் கீழ் இடம்பெற்றுள்ளன.

No comments: