News Just In

11/15/2019 10:52:00 AM

மட்டக்களப்பில் 428 வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் பகிர்ந்தளிப்பு - 3,98,301 பேர் வாக்களிக்க தகுதி


இலங்கை சோசலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கான சகல விதமான ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்ப்பட்டுள்ளதாகவும் இதன்படி 428 வாக்கெடுப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டதாகவும் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மாவட்டத்தில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,87,682 பேரும் கல்குடா தொகுதியில் 1,15,974 பேரும் பட்டிருப்புத் தொகுதியில் 94,645 பேருமாக 3,98,301 வாக்காளர்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும் இந்த தேர்தலுக்காக 4,991 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையிலும், பாதுகாப்பு கடமைகளுக்காக 1,688 பொலீஸ் உத்தியோகத்தர்களும், 320 பேர் சிவில் பாதுகாப்புக்காகவும் இணைப்பட்டுள்ளனர். 12 ஆண், பெண்வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 428 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அரச ஊடகப்பிரிவுதகவல் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியான மொத்தவாக்காளர்களும். நீதியானதும் நேர்மையானதும் சுதந்திரமானதுமாக  வாக்களிப்பதற்கு ஏதுவான சகல ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு வயோதிபர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்களும் வாக்களிக்க தேவையான சகல வசதிகளும் வாக்கெடுப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களும் கணக்கெடுப்பு நிலையங்களுக்காக பாதுகாப்பு கடமைக்கு இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர ரோந்துப் பணியில் விசேட பொலீஸ் பிரிவினர் பங்கெடுக்கவுள்ளனர்.

இன்று 15ம் திகதி வாக்குப் பெட்டிகள் கையளிப்பதற்கு என 54 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமைக்கு இணைக்கப்பட்டுள்ளனர். அதனை தவிர வலயங்களுக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளனர்,
தேர்தல் பணியினை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு குழுவின் சர்வதேச உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் தங்களது கண்காணிப்பு பணியினை ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர்தெரிவித்தார்.

இதுவரை 53 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 35 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் 18 முறைப்பாடுகளுக்குரிய தீர்வு பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில்ஆறு முறைப்பாடுகள் வன்முறைகளாகவும் 47 முறைப்பாடுகள் தேர்தல் விதி மீறுதல்களாகவும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



No comments: