News Just In

10/30/2019 09:24:00 AM

வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

குறைந்த அழுத்தப் பிரதேசமானது விருத்தியடைந்து தற்போது இலங்கைக்கு மேற்காக நிலை கொண்டுள்ளதுடன் மேலும் நாட்டை விட்டு விலகி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

எனவே இத் தொகுதியின் தாக்கம் இன்றிலிருந்து படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வானிலை தொடர்பாக இன்று காலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் வடக்கு (குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்) மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் இன்று மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழைக்கும் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் சாத்தியம் இன்று உயர்வாகக் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில், (குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில்) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில்100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: