News Just In

4/30/2026 05:51:00 AM

கொழும்பு ஹோட்டல் உரிமையாளர்களின் சுகபோகத்திற்கு வளங்களை தாரைவார்க்க முடியாது – சாணக்கியன் எம்.பி

கொழும்பு ஹோட்டல் உரிமையாளர்களின் சுகபோகத்திற்கு வளங்களை தாரைவார்க்க முடியாது – சாணக்கியன் எம்.பி


மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரை, அப்பகுதி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய இயற்கை வளமாகும். இவ்வளத்தின் மூலம் கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருமானம், வாழைச்சேனை மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, கொழும்பில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களின் சுகபோகத்திற்காக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், தவிசாளர் சு. சுதாகரன் மற்றும் சபை செயலாளர் உள்ளிட்டோருடன் சந்தித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் இயங்கும் 17 சுற்றுலா விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் பல ஆண்டுகளாக பிரதேச சபைக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்றார்.

இவ்வளத்தின் மூலம் சபைக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருமானம் இதுவரை பெறப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், கடந்த காலங்களில் சபையை நிர்வகித்தவர்கள் இதனை கண்காணிக்கத் தவறியிருந்தார்களா அல்லது இச்செயல்களில் தொடர்புடையவர்களாக இருந்தார்களா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுற்றுலா பணியகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், பல மாதங்கள் கடந்தும் அதற்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாசிக்குடா கடற்கரை, மட்டக்களப்பிற்கு கிடைத்த மிக முக்கியமான சுற்றுலா வளமாகும். இதன் மூலம் முதன்மையாக வாழைச்சேனை மக்களுக்கு அதிகபட்ச நன்மை கிடைக்க வேண்டும் எனவும், வெளிநகர ஹோட்டல் உரிமையாளர்கள் மட்டும் லாபம் ஈட்டும் நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பாசிக்குடா பகுதியில் இயங்கும் சில ஹோட்டல்கள் தேவையான அனுமதியின்றி செயல்படுகின்றன என்றும், அவற்றிடமிருந்து நிலுவையில் உள்ள வரி தொகைகளை வசூலிக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இவ்வருமானத்தினை பயன்படுத்தி வாழைச்சேனை பிரதேசத்தின் முழுமையான அபிவிருத்திக்கான திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த கலந்துரையாடல், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான முன்னாள் மாநகர முதல்வர் தி. சரவணபவான் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் பிரதி தவிசாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments: