News Just In

7/30/2026 01:17:00 PM

மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மாபெரும் சிரமதானம்

மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மாபெரும் சிரமதானம்


வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 03ஆம் திகதி ஆரம்பமாகி, 12ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

இதனை முன்னிட்டு, ஆலயத்திற்கு வருகை தரவுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் மற்றும் அடிப்படைத் தேவைகளை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் பல்வேறு விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் மாபெரும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் மாநகரசபையின் ஆணையாளர் என். தனஞ்செயன், மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக, சுவாமி எழுந்தருளி தீர்த்தமாடுவதற்காக தீர்த்தக்குளத்திற்குச் செல்லும் வீதி குறுகியதாக காணப்பட்ட நிலையில், அதனை அகலப்படுத்தி புனரமைக்கும் பணிகளையும் மாநகரசபை பொறுப்பேற்றுள்ளது.

குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனுடன் இணைந்து ஆலய வளாகத்தை தூய்மைப்படுத்தும் சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு டெங்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாநகரசபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைகளின் முதற்கட்டமாக, ஆலய வளாகத்தில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றப்படுவதுடன், நீர் தேங்கி டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய குழிகள் மற்றும் கிடங்குகள் மூடப்பட்டு வருகின்றன.

மேலும், மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட 20 வட்டாரங்களிலும் நிலவும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதாரப் பிரிவினரால் வாராந்தம் தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: