News Just In

3/20/2026 02:51:00 PM

மட்டக்களப்பில் கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. உள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் வழங்கிய திடுக்கிடும் தகவல்

மட்டக்களப்பில் கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. உள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் வழங்கிய திடுக்கிடும் தகவல்


மட்டக்களப்பின் கொத்தியாபுலை பகுதியில் நேற்றைய தினம் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பெண், கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் உள்ள கிணற்றில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண், இன்று (20.03.2026) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை வேளையில், குறித்த பகுதியை கடந்த சிலர் பால்பண்ணைக்குச் செல்லும் போது பொதுக் கிணற்றிலிருந்து அலறல் சத்தம் கேட்டு அதற்கு அருகில் சென்றனர். அப்போது, பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் முழ்கிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கிணற்றுக்குள் இன்னொரு சடலம்

மீட்கப்பட்ட பெண் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த கிணற்றில் இன்னொரு சடலமும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை மீட்கும் நடவடிக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பெண் தான், தனது குழந்தையுடன் செல்லும் போது கொத்தியாபுலை பகுதியில் நேற்று கடத்தப்பட்டதாகவும், தாக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்போது, குழந்தை வயல் வெளி பகுதியில் இருந்த நிலையில் அங்குள்ளவர்கள் குழந்தையை நேற்று மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கிணற்றில் உள்ள மற்றொரு சடலம், கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பரிவிற்குட்பட்ட நாற்பது வட்டை பகுதியில் காணாமல் போன பெண்ணாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது கொக்கட்டிச்சோலைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

No comments: